பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
நாமக்கல்: ராமாபுரம்புதூர் லட்சுமி ஹயக்ரீவர், சுதர்ஸனர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல், ராமாபுரம்புதூரில், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்ஸனர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் உள்ளன. இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 12ம் தேதி, காலை, 8.30 மணிக்கு, சுதர்ஸன ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மாலை, புண்யாகம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், மகாசாந்தி கும்பஸ்தாபனம், நித்ய ஹோமம், இரவு பூர்ணாகுதியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, அக்னிப்ரணயனம், நித்ய, மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமும், மாலை, மகா சாந்தி சிறப்பு அபிஷேகம், புண்யாகம், சயனாதி வாசம், மூர்த்தி ஹோமமும் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு, நித்ய, தாரா ஹோமம், கும்பப்பிராயாணமும் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 9.30 மணிக்கு, விமான குடமுழுக்கு விழாவும், 10 மணிக்கு, சக்ரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர், செல்வ கணபதி, தட்சிணாமூர்த்தி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு, சம்ப்ரோஷணமும் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், மகா ஆசீர்வாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.