பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள், திருமலை, வெங்கடாஜலபதி கோவிலுக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில், முகலாயர்கள் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நம்பெருமாள் எனப்படும், உற்சவர் சிலையை காக்க, இந்துக்கள், பெரும் சிரத்தை எடுத்தனர். 60 ஆண்டுகள், இந்தியா முழுவதும், பல இடங்களில், நம்பெருமாள், பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆந்திராவில், திருமலை வனப்பகுதியிலும், சில ஆண்டுகள், நம்பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, திருமலையில், ஒரு மண்டபத்துக்கு, "ரங்கநாதர் மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருமலையில், நம்பெருமாள் இருந்த சம்பவத்தை நினைவு கூரும்வகையில், திருமலையில், ஆண்டுதோறும் நடக்கும், ஆனி வார ஆஸ்தான உற்சவத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, பட்டு வஸ்திரங்கள், மாலை, மரியாதை திருமலைக்கு அனுப்புவது வழக்கம். இந்த வழக்கப்படி, ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து, மாலை, வஸ்திரம், பூ, பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள், திருமலைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ஆடி மாதம் முதல் தேதி நடக்கும் உற்சவத்தின் போது, திருமலை வெங்கடாஜலபதிக்கு, ஸ்ரீரங்கம் கோவில் மாலை, பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும்.