பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
பழநி: பழநி மலைக்கோயில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் பாதுகாப்பு தர போலீஸ் நிர்வாகம் முன்வர வேண்டும். பழநிமலைக் கோயிலுக்கு தைப்பூசம், பங்குனிஉத்திரம் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பிற நாட்களிலும், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பாதுகாப்பு குறைவு: உலகப்புகழ் பெற்ற ஸ்தலமான பழநி மலைக்கோயில் பாதுகாப்பு என்று பார்த்தால், பெயரளவில் மட்டுமே உள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் உள்ளனர். மலைக்கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருவர், ஆயுதப்படை 4 போலீசார் என மொத்தம் 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றப்படி அடிவார போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விழாக்காலங்களில் மட்டுமே மலைக்கோயிலில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வின்ச், படிப்பாதை, யானைப்பாதை, வழியாக மலைக்கோயிலுக்கு சென்று வந்தாலும் இவர்களை சோதனை செய்வதில் போலீசார் இல்லை. நிரந்தர காவல் உதவி மையம் நிறுவ வேண்டும். நுழைவுப்பகுதிகளில் சோதனைச்சாவடி (மெட்டல் டிடெக்டர்) அமைத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்," மலைக்கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாவலர்கள், போலீசார் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கோயில்களின் பாதுகாப்பு வரைவு திட்டம்(செக்யூரிட்டி பிளான்) தயார் செய்து, மாவட்ட எஸ்.பி., மூலம் அரசுக்கு அறிக்கை அளிக்க அரசு உத்திரவிட்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து,மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடந்துள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். டி.எஸ்.பி., குப்புராஜ் கூறுகையில்,""மலைக்கோயில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, அடிவாரம் போலீசார் மற்றும் கோயில் பாதுகாவலர்கள் உள்ளனர். பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. என்றார்.