பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 181-வது ஆடித்திருவிழா இம்மாதம் 19-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் உகப்படிப்பு பணிவிடை, பால் அன்னதர்மம், உச்சிபடிப்பு பணிவிடை, திருஏடுவாசிப்பு, புஷ்பவாகனத்தில் அய்யா பவனி வருதல் உள்ளிட்டன நடந்தது. நிறைவு நாளான 11-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை உகப்படிப்பு, பணிவிடை, புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடந்தது. பகல் 12.00 மணியளவில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி வரும் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு ஸ்ரீ குரு சிவசந்திரன் அய்யா வழி பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ., சுப்பிரமணிய ஆதித்தன், மகளிர் கல்லூரி செயலர் தாண்டேஸ்வரன், அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை கௌரவத்தலைவர் நடேசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தோப்புமணி, சிங்க பாண்டி, பொன்னுத்துரை, வரதராஜபெருமாள், பேராசிரியர் விஜயகுமார், ஆசிரியர் செல்வின், பாலகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றிய தே.மு.தி.க. செயலர் செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்திருந்தனர்.