பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஆடிப் பூர தேரோட்ட விழா, நாளை துவங்குகிறது. ஆண்டாள் கோவிலில், நேற்று, "தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை, சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, கொடி மரத்தில் ஏற்றப்படுகிறது. இரவு, 11:00 மணிக்கு, பதினாறு வண்டி சப்பரத்தில், ஆண்டாள், ரெங்கமன்னார் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கும். ஆக., 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு, ஆடிப்பூர மண்டபத்தில், பெரியாழ்வார் எழுந்தருள, பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு, மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, ஐந்து கருட சேவையில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்க மன்னார், பெரிய கருட வாகனத்திலும், பெரியாழ்வார், சின்ன அன்னவாகனத்திலும், வீதி உலா வருவர். வரும், 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார், சயன நிலையில், பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும், 9ம் தேதி, ஆடிப்பூரம் அன்று, அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம், காலை, 8:05 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி நாள் மாலை, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, புஷ்ப யாகம் நடக்கும்.