பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
திருவள்ளூர்:புங்கத்தூர் முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.திருவள்ளூர் அடுத்த, புங்கத்தூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதம், மூன்றாவது வாரத்தை ஒட்டி, தீமிதி திருவிழா நடைபெற்றது.கடந்த மாதம், 31ம் தேதி புதன் கிழமையன்று, தாய்வீட்டு சீர்வரிசையுடன் விழா துவங்கியது. அன்று மதியம், கிராம தேவதையை அழைத்து வருதல் நடைபெற்றது. இரவு, பக்தர்கள் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.மறுநாள் வியாழக் கிழமை, குங்கும பூஜையும், அம்மன் கரகம் வீதி உலாவும் நடைபெற்றன. 2ம் தேதி வெள்ளிக் கிழமை பால் அபிஷேகம், கூழ் வார்த்தல், பூகரகம் சுற்றி வருதல், பொங்கல் வைத்து படையல் போடுதல், அலகு குத்துதல், தீச்சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி வருதல் போன்றவை நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான, தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி, தீ மிதித்தனர்.அதேபோல், பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலையில், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன், நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.