பதிவு செய்த நாள்
06
ஆக
2013
10:08
கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. 12 நாட்களுக்கு இந்த பூஜை நடக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. அம்பாள் அவதரித்த ஆடி பூரம் நட்சத்திரத்தையெட்டி நேற்று முதல் தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம், நிர்மால்ய பூஜை நடந்தது. 5 மணிக்கு அபிஷேகம், 6.15 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி, 8.15 மணிக்கு நிவேத்ய பூஜையும் நடந்தது. ஆடி களப பூஜையின் முதல் நாளான நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கொண்டு வந்த தங்க குடம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த ஆதீனத்தை கோவில் மேலாளர் சோணச்சலம் வரவேற்றார். இதில், ஆய்வாளர் ஆறுமுகம், ஆர்.எஸ்.எஸ். முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடத்தில் களபம் நிரப்பப்பட்டு கோயில் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்தார். பின்னர் சுவாமிகள் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.15 மணிக்கு பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்ததீபாராதனை ஆகியன நடந்தது. நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை நடக்கும் ஆடி களப பூஜையின் 13-ம் நாளான (16-ம் தேதி) உதயஅஸ்தமன பூஜையும், அதிவாசஹோமத்துடன் ஆடிகளப பூஜை நிறைவடைகிறது. ஆடிகளப பூஜையை காண ஏராளமான பெண்பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.