மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே! என்று அழகாகப் பாடுகிறாள் ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார். பெருமாளின் புகழை பறைசாற்றிய அவள், ஓரிடத்தில் காலை வாறுகிறாள் பாருங்கள். ஏலாப்பொய்கள் உரைப்பானை... என்று. ஆம்... இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான். இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள். கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான். ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள், ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா என பார்க்கத்தானே! உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே! ஒருவேளை நெய் முறுக்கு இருக்குமென நம்பி வந்தாயோ! உனக்கு மட்டுமா! இல்லை....வாலுப்பசங்களான உன் நண்பர்களுக்கும் சேர்த்து திருடவா? என்றெல்லாம் மிரட்டுகிறாள். அந்தக் கண்ணன் என்ன சாதாரணமாவனா? தவம் செய்த முனிவர்களாலேயே, அவனது செயலைப் புரிந்து கொள்ள முடியாதே! இந்த ஆய்ச்சியை ஏமாற்றுவதா அவனுக்கு பெரிய கலை! தாயே! இது என் வீடு என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன், என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம். ஏய்! இதை என்னை நம்பச் சொல்கிறாயா? உண்மையைச் சொல், என்று மீண்டும் மிரட்டுகிறாள் அந்த ஆய்ச்சி. காதில் பிடி மேலும் இறுகுகிறது. அம்மா! பிருந்தாவனத்தில் நான் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன் இல்லையா! அதில், ஒரு கன்றுகுட்டியைக் காணவில்லை. ஒரு÷ வளை, இந்த பானைக்குள் ஒளிந்திருக்கிறதோ என கையை விட்டு துழாவினேன், என்கிறான். இப்படி மழலை பொய்யால், நம்மை மகிழ்வித்தவன் சின்னக்கண்ணன். அதனால் தான் ஆண்டாள் அவனை ஏலாப்பொய்கள் உரைப்பானை என்று பாடினாளாம்.