*அவசரயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அதாவது, இறைவனைச் சரணடைவது. இதை விட சிறந்த மார்க்கம் உலகில் வேறில்லை என்று திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. *சுவாமிதேசிகன், கோதாஸ்துதியில் ஆண்டாளை விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: விசேஷமாகப் போற்றுகிறார். விஷ்ணு சித்தரின் மகளான ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் பொருள். *ஆண்டாள் மார்கழி நோன்பை நோற்று கண்ணனை அடைந்தாள். மார்கழியை மார்கசீர்ஷம் என்று குறிப்பிடுவர். தலைசிறந்த வழி என்பது இதன் பொருள். கடவுளை அடைவதற்குரிய வழிகளில் ஆண்டாள் காட்டிய பாவை நோன்பு மிகவும் சிறந்தது. *திருமாலின் திருவடியில் பூக்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ஆத்மாவை அவன் திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும். வாய், அவனுடைய திருநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்றுவழிகளையும் பின்பற்றி உயிர்கள் மோட்சகதி பெற வேண்டும் என்பதே கோதை காட்டிய நெறிமுறை. *கோதை என்பதற்கு நல்ல வாக்கு அருள்பவள் என்பது பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனதில் சிந்திப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்கலமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள். *கோதை திருமாலை மணக்கும் பேறு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாலுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்னும் பெயர் பெற்றாள். *கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்றுத் தாருங்கள் என்று சொல்லி அனுப்பினாள். இதன்மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள். *அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாய் என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் ஆண்டாளை சிறப்பிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களின் கோஷ்டிக்கு, ஆண்டாள பூங்கொடியாக விளங்குவதால், அவளின் அவதாரம் உயர்ந்ததாக போற்றப்படுகிறது.