பதிவு செய்த நாள்
12
செப்
2013
04:09
*ஒவ்வொரு கணப்பொழுதாக வாழ்வு மலர்கிறது. கடந்தகாலம், எதிர்காலம் பற்றி கவலையில்லாமல், வாழ்வின் சாரமாக இருக்கும் நிகழ்காலத்தில் ஈடுபாட்டோடு வாழும் தான் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது.
*நான் சுதந்திரமாக இல்லையே என்று ஒருபோதும் வருந்த வேண்டாம். எதிர்மறையான எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது.
*உண்மையை ஒத்துக் கொள்ளாமல் அதை மறைக்க முயல்கிறோம். இதுவே நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணம். மாற்ற முடிந்ததை மாற்றவும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டால் வாழ்வில் பிரச்னை குறைந்து விடும்.
*வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது.
*மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை விருப்பம் என்றே சொல்லலாம்.
*சுகதுக்கங்களை அனுபவிக்கும் போது மனிதன் தன்னை நான் சுகவாசி நான் சிரமப்படுவதற் கென்றே பிறந்தவன் என்று சொல்லிக் கொள்கிறான். சுகமோ, துக்கமோ மனிதனைப் பாதிப்பதில்லை. மனதில் எழும் எண்ணங்களே மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றன.
*பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.அதனால் ஏமாற்றமே உண்டாகும். பிறர் எனக்கு அதிக மதிப்புமரியாதை தரவேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
*செடியில் மலரும் பூக்கள் பிறர் புகழ வேண்டும் என்பதற்காக மலர்வதில்லை. செடிகளின் இயல்பு பூப்பூப்பது. அதுபோல, பிறர் நன்மைக்காக உங்களின் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.
*புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும்திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடிஅலையக் கூடாது.
*இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால் தான், வாழ்வில் நன்மைநடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விட முடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும், அதற்கு காரணம் நானே என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது.
*மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வுமுறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிப்பு தானாகவே வந்துவிடும்.
*முற்றும் நல்லவர், தீயவர் என்று ஒருவரைப் பார்க்கமுடியாது. விருப்பும், வெறுப்பும் கலந்தவர்களாகவே எல்லாரும் இருக்கிறோம். இதை உணர்ந்து விட்டால் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் உருவாகும்.
*உடலைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பதைப் போல, மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்ற அழுக்குகளை போக்க அமைதி, அடக்கம், கொல்லாமை போன்ற சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
*தாவரம், விலங்கு, பூச்சி, மனிதன் என உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை பொதுவானது. வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் குறிக்கோளுடன் வாழ வேண்டும். இதை விட சிறந்த குறிக்கோள் வேறு எதுவும் இல்லை.
*நம்முடைய வாழ்நாள்குறுகியது. செய்ய வேண்டிய செயல்களோ மிகப் பெரியது. காலத்தை வீணாக்காமல் குறிக்கோளுடன் வாழ்வு நடத்த வேண்டும்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி