பதிவு செய்த நாள்
20
செப்
2013
10:09
திருப்பூர், பெருமாநல்லூரில், வேண்டியவருக்கு, வேண்டியது அருளும் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு
முந்தைய வரலாற்றை கொண்ட இக்கோவிலில், இன்றும், குண்டம் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
சிவசக்தி ரூபம்: தாருகா சூரன் என்பவன் அசுரர் கூட்டத்துக்கு தலைவனாக விளங்கியதோடு, கடுந்தவம் புரிந்து, பெண்ணை தவிர வேறு யாரும் என்னை கொல்லாத வரம் வேண்டும் என வேண்டி, வரம் பெறுகிறான். ஆணவம் அதிகரித்து, தேவர்களை கொடுமைப்படுத்துகிறான். சிவனும், சக்தியிடம், அசுரனை கொன்று விடுமாறு கூறி, விஷக்கரை படிந்த கனல் கண்ணில் இருந்து ஒரு ரூபம் வெளிப்பட்டது. அது, காளியின் அம்சமாக வழங்கப்படுகிறது எனவும், மகிஷாசுரன் என்ற அசுரன் எருமை தலையோடு பிறந்தவன், தேவர்களை துன்புறுத்தியதை கேள்விப்பட்டு, கோபப்பட்டதால், ஒரு உருவம் உருவாகி, அழித்தது எனவும், அதுவே காளி அம்சம் எனவும், இன்றைக்கும் காளிக்கு எருமை கெடா வெட்டுவது, அதன் அடிப்படையிலேயே என்ற புராண கதை உள்ளது. அவ்வாறு உருவான காளி, கொண்டத்து காளியாக பெருமாநல்லூரில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் அமர்ந்த நிலையில், ஆக்ரோஷமான முகம், தீயின் ஜூவாலையை காட்டும் தலைமுடி, எட்டு கரங்களுடன், வலப்பக்க கைகளில், வேல், உடுக்கை, கத்தி, பட்டாக்கத்தி, இடப்பக்க கையில் பிஸ்மய முத்திரை, மணி, சாட்டை, கபாலம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. இரு பக்கமும் கர்ஜிக்கும் சிங்கம் உள்ளது. மனித வாழ்வின் ஏழு படிநிலைகளை குறிக்கும் வகையில், அம்மன் , ஏழு பீடங்களின் மீது அமர்ந்துள்ளார். அம்மன் சிற்பம், பழமையான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
பெயர் காரணம்: ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சை சோழர்கள் நாட்டை பிடித்து, பெரும்பழாநிலை என பெயரிட்டதும், 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒத்தனூரான பெரும்பழனம் என வீரபாண்டிய வம்சத்தினர் பெயர் வைத்ததும், நாளடையில் பெருமாநல்லூர் என பெயர் மாறியுள்ளது. ரோமானியர்களும், கிரேக்கர் களும் இப்பகுதியில் வணிகம் செய்ததும், சேரநாட்டின் மேற்கு கரையில் இறங்கி, பாலக்காட்டு கணவாய் வழியாக சேலம் வரை பெருவழியில் சென்று வணிகம் செய்ததாகவும், உயர்ரக மணிகள், ஆபரணங்கள், மலையில் உற்பத்தியாகும் பொருட்கள், வாசனை திரவியங்கள் வியாபாரம் நடந்ததும், இது வணிக பெரு வழி என சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. அவ்வாறு வரும் வணிகர்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இருந்ததும், அவர்கள் தங்களை காக்கும் கடவுளான காளிக்கு, வணிக பெருவழியில் குடியிருப்புகள் அமைத்து, வழிபட்டு வந்துள்ளனர். சந்தைக்கு வரும் பண்டங்கள் மீது சுங்கம் விதித்து, கோவில் திருவிழாக்கள் நடத்தியுள்ளதாகவும், கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டம் திருவிழா: இக்கோவிலில் குண்டம் திருவிழா பங்குனி மாதம் நடந்து வருகிறது. இங்கு, தொன்மை மிகுந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்ததற்கான நீர் மற்றும் நில வளம் இருந்துள்ளது. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், கால்நடைகளை மேய்த்துக்கொண்டு, வேட்டையாடுதலையும் தொழிலாக கொண்டிருந்தனர். புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி இடம் மாறும்போது, அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களில் சேர்த்து குவித்து வைத்த சாணம், குப்பை ஆகியவற்றை தீ மூட்டி, நல்ல தணலாக இருக்கும்போது, அவற்றின் மீது கால்நடைகளை நடக்க விட்டு, தொற்றுநோய் வராமல் காத்ததும், காலப்போக்கில் தாங்களும் அவ்வாறு செய்ததும், நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்ததால், பொது இடங்களில் இதே போன்ற கட்டமைப்பை உருவாக்கி, பெண் தெய்வத்தை பிரதானமாக வழிபட்டுள்ளனர். அன்று தொடர்ந்த இந்த வழிபாடு, இன்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 60 அடி நீளத்திற்கு கோவில் முன் குண்டம் அமைந்துள்ளதும், குண்டத்தின் சாம்பல், நோய் நொடி, கை கால் பிரச்னைகளை தீர்ப்பதாக மக்கள் நம்பி, சாம்பலை எடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வருகின்றனர். வடக்கு பார்த்துள்ள கோவிலின் உட்புறத்தில், இடப்பக்கம் கிழக்கு நோக்கி, யோகி முத்துக்குமாரசாமி சன்னதி உள்ளது.
ஒரு வீரன், தனது வலக்கையில் உள்ள வாலால், கழுத்தில் குத்துவதும், இடப்பக்கம் வால் வெளியே வருவதும் போல் சிலை உள்ளது. அவரது இடது கையில் ஒரு வில் உள்ளது. யோகி முத்துக்குமாரசாமி, சேவூர் பகுதியில் தங்கியிருந்து நல்ல காரியங்கள் செய்ததாகவும், செய்திகள் கூறும் செப்பேடும், கருவிகள், வாள், வழிபட்ட அம்பிகை சிலைகள் ஆகியவை இன்றும் சேவூர் கிராமத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில், வீரத்தை உயிராக கருதிய வீரர்கள், நாட்டையும், மக்களையும் காக்க, உயிரை கொடுத்தாவது கடமையை சரியாக செய்யும், வீரர்கள் வெற்றி பெற்றால், காளிக்கு தனது தலையை தாமே அறுத்து காளிக்கு காணிக்கையாக்கும் முறையாக, நவகண்ட காணிக்கை முறையாக இருக்கலாம் எனவும், சங்க கால இலக்கியங்களில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மிரட்டும் துவார பாலகர்கள்: நுழைவாயிலில், நீட்டிய கோரைப்பற்களுடன், மிரட்டும் கண்களுடன், ஆயுதங்களுடன் நீலி, நீலகண்டன் உள்ளனர். உள் வாயிலில் இடாகினி, மோகினி என இருவர் உள்ளனர். கோவிலுக்கு உள்ளே சப்த கன்னியர்,மகாமுனி, மந்திர முனி உள்ளிட்டவை உள்ளன. அம்மனின் சக்தி தெரியாத, ஆங்கிலேய அதிகாரி, குண்டத்தின் மீது குங்கிலியத்தை ஊற்றியதாகவும், பூசாரியும், வீரமக்களுக்கும் குண்டம் இறங்கியபோது, அம்மனே கை வைத்து தாங்கியதாகவும், கண் பார்வை பறிபோனதும், அம்மனை வேண்டி பார்வை திரும்ப பெற்று, ஆண்டுதோறும் அரசு சார்பில் காணிக்கை செலுத்தி வந்ததும், ஆங்கிலேயருக்கு வசூல் செய்து கொடுத்தவர், கோவில் முன் ஓய்வு எடுத்தபோது, தாரை, தப்பட்டை முழக்கத்தை நிறுத்த உத்தரவிட்டதால், கொப்புளங்கள் உண்டானதாகவும், வருந்தி அம்மனை வேண்டிய பிறகு சரியானதாகவும், கருவுக்குள் இறந்த குழந்தையை உயிருடன் அம்மன் வழங்கியதாகவும், அம்மன் அருள் குறித்து பல செவி வழி செய்திகள், மக்கள் நம்பிக்கையாக சொல்லப்படுகின்றன.