பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
திருப்பதி: திருப்பதி கோவிலில், 20 லட்சம் சிறிய லட்டுகள் தயாரிக்க, 20 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டும் திட்டம் எதுவும் இல்லை என, கோவில் தேவஸ்தான மடப்பள்ளி அதிகாரி கேசவராஜு தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: திருப்பதி கோவிலில், காலை, 7:30 மணியில் இருந்து, நைவேத்திய பிரசாதங்கள்; பகல் 12:00 மணிக்கு, கல்யாண உற்சவ பிரசாதங்கள்; இரவு, 7:30 மணிக்கு, நைவேத்திய பிரசாதங்களாக, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை மற்றும் தயிர்சாதம் வழங்கப்படுகின்றன. இப்பிரசாதங்கள் தீர்ந்துவிட்டால், சிறிய லட்டுகளும், பின்னர் கற்கண்டும் வழங்கப்படுகின்றன. பக்தர்களுக்கு, 20 கிராம் எடையுள்ள, சிறிய லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்காக, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் சிறிய லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய லட்டுகள், கோவில் உள்ளேயே தயாரிக்கப்பட்டு வந்தன. 15 ஆண்டுகளுக்கு முன், கோவிலுக்குள் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக, கோவிலுக்கு வெளியில் உள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளையிடம், லட்டு தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அங்கு தயாரிக்கப்படும் லட்டுகளை, கோவிலுக்கு எடுத்து வர சிரமமாக இருப்பதால், பெரிய லட்டுக்காக, பூந்தி தயாரிக்கும் கட்டடத்தின் மேல்தளத்திற்கு, சிறிய லட்டு தயாரிக்கும் இடத்தை மாற்ற, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டடத்தில், சிறு மாற்றங்கள் செய்த பிறகு, சிறிய லட்டு தயார் செய்யப்படும்.
ஆர்டரின் பேரில் தயாரிப்பு: தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் நடைபெறும், சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக் காலங்களில், சிறிய லட்டு பிரசாதம் விற்கப்படுகிறது. அப்போது, அவர்களுக்கு அதிக லட்டு தேவைப்பட்டால், தேவஸ்தான செயல் அதிகாரி அனுமதி பெற்ற கடிதத்துடன், ஒரு லட்டு, மூன்று ரூபாய் விலையில், எவ்வளவு லட்டு தேவையோ, அதற்கேற்ப டி.டி., இணைத்து அளிக்கும் கோவில்களுக்கு, இந்த லட்டுகள் தயார் செய்து வழங்கப்படுகின்றன.
மறுப்பு: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இருக்கும்போது, 20 லட்சம் சிறிய லட்டுகள், தயார் செய்வதற்கு அவசியம் இல்லை. பிற கோவில்களுக்கும், எப்போதாவது தான், சிறிய லட்டுகள் தயார் செய்து வழங்கப்படுகின்றன. எனவே, தினசரி, 25 ஆயிரம் சிறிய லட்டுக்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.