வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கண்காணிப்பு கேமிரா வைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறை மத்தியப்பகுதியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்தக்கோவிலில் மேற்கு முகமாக நோக்கி முருகன், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திருவிழா, தைப்பூசத்திருவிழா, ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜைத்திருவிழா, பாதயாத்திரை காவடிக்குழு சார்பில் அன்னதானவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் இந்த கோவிலில் இரவுக்காவலராக பணியாற்றி வந்த ஒருவர், உண்டியல் பணத்தை நூதன முறையில் திருடியதாக எழுந்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தாமாக பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவர் மீது கோவில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே இனி மேல் இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று கோவில்செயல்அலுவலர் ஜெயசெல்வம் அப்போது கூறினார். ஆனால் அதற்கான எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்பதால் பக்தர்கள் மேலும் கவலையடைந்துள்ளனர். கோவில் உண்டியல் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் விரைவில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.