பதிவு செய்த நாள்
23
செப்
2013
10:09
அவிநாசி: மழை பெய்யவும், உலக அமைதியை வலியுறுத்தியும், 1,008 பெண்கள், கஞ்சி கலயத்தை சுமந்து ஊர்வலமாக சென்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், அவிநாசியில் நேற்று காலை கஞ்சி கலய விழா நடந்தது. அதையொட்டி, 1,008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்து, பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். விஜயா பாங்க் அலுவலர் ரவிபாபு சக்தி கொடியேற்றினார். திருப்பூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவி சரஸ்வதி தலைமை வகித்தார். கோவில் நிர்வாகி அவிநாசியப்பன், கவுன்சிலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை, பெங்களூரு ஸ்ரீகுருகுல வேதாகம சம்ஸ்க்ருத மஹாபாடசாலை ஆசிரியர் முரளி துவக்கி வைத்தார். பார்க் வீதி, வி.எஸ்.வி., காலனி, காமராஜ் வீதி, கச்சேரி வீதி, சேவூர் ரோடு வழியாக சென்ற ஊர்வலம், மன்றத்தை அடைந்தது. அங்கு, கஞ்சி கலயம் மாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு, மாங்கல்ய சரடு, குங்குமம், கஞ்சி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, வழிபாடு மன்ற நிர்வாகி மஹாதேவன் தலைமையிலான உறுப்பினர்கள் செய்திருந்தனர்.