பதிவு செய்த நாள்
23
செப்
2013
10:09
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை பூஜை நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெருமாள் கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தாசர்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறி படையல் செய்தனர். தாசர்கள் பெருமாளுக்கு சங்கு நாதம் செய்தனர். அதிகாலை முதலே, கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதல், மாலை வரை, கூட்டம் குறையாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.பொங்கலூர்: கோவில்பாளையம் ராமசாமி கோவிலிலும் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள், ராமசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டால், பெருமாளை நேரில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் மொட்டையடித்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.
அவிநாசி: தாளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், அதிகாலை 5.00 மணிக்கு பெருமாளுக்கு பால் அபிஷேகம், திருமஞ்சனம், 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திருப்பூர், அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அதிகாலை 3.00 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பண்டரி பஜனை குழுவினர் சார்பில், கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது.