பதிவு செய்த நாள்
08
அக்
2013
11:10
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஸ்தல வரலாற்றை விளக்கி, நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. சாலிஹோத்திர மகரிஷி, பெருமாளை நினைத்து, திருவள்ளூர் ஹிருதாப நாசினி குளக்கரையில் அமர்ந்து, தவம் இருந்தார். அப்போது, வீரராகவ பெருமாள், கிழ அந்தணர் வேடத்தில், அவருக்கு காட்சியளித்து, உணவு வேண்டினார். மகரிஷியும், வந்திருந்த அந்தணருக்கு, உணவு, தண்ணீர் வழங்கினார். அவற்றை உண்ட அந்தணர், தனது களைப்பினை போக்க, எவ்வுள் (எங்கே உறங்க) எனக் கேட்டார். அவருக்கு, தனது ஆஸ்ரமத்தில் தங்க இடம் கொடுத்தார். அங்கு, பெருமாள் பள்ளி கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். இந்த ஸ்தல வரலாற்றை விளக்கி, திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், ராமர் சன்னிதி அருகே, கொலு, நேற்று முன்தினம் துவங்கியது. அதில், சாலிஹோத்ர மகிரிஷி குளத்தில் தவம் இருப்பது, கிழ அந்தணர் வேடத்தில் பெருமாள் யாசகம் கேட்பது, ஆஸ்ரமத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் நிலையையும், வடிவமைத்து கொலுவில் வைத்து உள்ளனர். மேலும், பெருமாளின் பத்து அவதாரங்களை விளக்கியும், ராமர் பட்டாபிஷேக காட்சியும், வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவை ஒட்டி, தினமும், மதியம், 2:00 மணிக்கு, பெருமாளுக்கும், கனகவள்ளி தாயாருக்கும், திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு, உற்சவர், தாயார், உட்புறப்பாடு நடைபெறும். மேலும், தினசரி, காலை, கண்ணாடி அறையில், உற்சவர் தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.