பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை தான்,” என, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பாபி ராஜு கூறியுள்ளார்.
விசாரணை: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகு, நேற்று பாபி ராஜு கூறியதாவது: நடந்த முடிந்த பிரம்மோற்சவத்தில், தேவஸ்தானம் மற்றும் விஜிலென்ஸ் ஊழியர்கள், போலீசார், மற்ற துறைகள், தற்காலிக ஊழியர்கள், நல்ல முறையில் பணியாற்றினர். நாட்டின் பல பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடந்த, ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான்; இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு விரைவில் கெட்டுப்போய் விடுவதால், தரமான, நல்ல லட்டுகள் தயாரிக்கப்படும். இதற்காக, லட்டு, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதான கூடத்திற்கு, பக்தர்கள் விரும்பி வரும் வகையில், உணவுகள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லட்டு பிரசாதம்: பிரம்மோற்சவம் நடந்த, ஒன்பது நாட்களிலும், பாதயாத்திரை பக்தர்களுக்கு, இலவச லட்டுப் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரம்மோற்சவம் நிறைவடைந்ததையடுத்து, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு, 12:00 மணி முதல் இலவச லட்டு வினியோகம் நிறுத்தப்பட்டது. விரைவில் நடக்க உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில், கலந்தாலோசித்து, பாத யாத்திரை பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் மீண்டும் துவக்கப்படும். கடந்த, 1981ல், 3.5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்கத் தேருக்குப் பதில், 25 கோடி ரூபாய் செலவில் புதிய தங்கத் தேர் செய்யப்பட்டது. ஆகம பண்டிதர்களின் ஆலோசனைப்படி, ஏழு மலையானுக்கு புதிய வெள்ளித் தேர் தயாரிப்பது குறித்தும், கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். மேலும், ஆந்திர மாநிலத்தில் நடந்த போராட்டத்தினால், திருமலைக்கு பஸ்கள் நிறுத்தப்பட்ட போது, பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு, டீ, காபி, பால், குடிநீர், அன்னதானம் ஆகியவை ஆங்காங்கே இலவசமாக வழங்கப்பட்டன.
நன்கொடையாளர்கள்: இந்த சேவையை நிரந்தரமாக செய்வது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். இதற்காக நன்கொடை அளிக்க, நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.