பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
உடன்குடி: குலசேகரன் பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்வான மகிஷாரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடற்கரை கிராமமான குலசேகரன்பட்டணத்தில் அன்னை முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டு கருணை மழை பொழிந்து கொண்டிருக்கும் மூவுலகிற்கும் நாயகி அம்மையும் அப்பனும் காட்சியளிக்கும் அற்புத தெய்வமாம் அன்னை முத்தாரம்மன்.வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும் முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் பலவாறாக அன்னை பெயர்க்காரணம் பெறுகின்றாள். அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோயில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும்.வினை மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகளை நீங்கப்பெறுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பு மிக்க திருவிழா கடந்த அக்-5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தங்களது வலது கையில் பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறு கட்டி.அதன்பின் ஒவ்வொரு பக்தர்களும் தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர். 10ம் திருநாளான அக் 14ம் தேதி காணிக்கைகளை பணமாகவும் பொருட்களாகவும் கோயிலில் கொண்டு சேர்ப்பார்கள். திருவிழா துவங்கியஅக் 5ம் தேதி முதல் அக் 13ம் தேதி வரை 9 நாட்களும் தினசரி காலை 8மணி,10.30 மணி,பகல் 1 மணி,மாலை 3.30 மணி,மாலை 6 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும்.தினசரி இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் வழங்கினார். வேடம் அணிந்த பக்தர்கள் தங்களது ஊர் பெயரில் தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி மற்றும் கிராமிய கலைகள், டிஸ்கோ ஆகியன இணைத்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.இந்த கலைக்குழுவினர் நெல்லை தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாரசம்ஹாரம் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கோயிலுக்குஅனைத்து தசரா குழுக்களும், வேடம் அணிந்த பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் மக்கள் கூடினர் .திரும்பிய திசைகளில் எல்லாம் வேடம் அணிந்த பக்தர்கள் காட்சி தந்தனர். 10ம் திருவிழாவைமுன்னிட்டு கோயிலுக்கு தமிழக சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சிஜெயராமன்,தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் மனோகரன்,உடன்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்நாராயணன் உட்பட பலர் வந்துசாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்றபோது கடும் விரதம் இருந்து காளி வேடம் அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை அணிவகுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து மகிஷாரனை அம்மன் வதம் செய்யும்நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெருவீதி உலா சென்று மாலை சுமார் 5 மணி அளவில் கோயிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டு தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.பின்பு பக்தர்கள் வேடம் கலைவார்கள்.நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் நெல்லை அன்புமணி ,கோவிலின் தக்காரும் உதவித் ஆணையருமான செல்லத்துரை நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.