பதிவு செய்த நாள்
09
நவ
2013
03:11
தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்
தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவமாகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு எவ்வாறு கருவியாய் நின்று உதவுகின்றன என எண்ணலாம். தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன. இது பற்றிய விரிவான செய்திகளை 11முதல் 15 உள்ள செய்யுட்களில் நாம் காணவிருக்கிறோம்.
தாத்துவிகங்கள்
இனி தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும். பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.
தாத்துவிகம் 60
பிருதிவியின் கூறு 5 எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு
அப்புவின் கூறு 5 சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சோணிதம்
தேயுவின் கூறு 5 இருதயத்தில் வெப்பம், பசித்தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம்
வாயுவின் கூறு 10 உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள்
ஆகாயத்தின் கூறு 10 அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள்
ஞானேந்திரியங்களின் 5 சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்
விடயங்கள்
கன்மேந்திரியங்களின் 5 வசனம்(பேச்சு), கமனம்(நடை), தானம்(கொடை), விசர்க்கம்(போக்கு), ஆனந்தம்(இன்பம்)
விடயங்கள்
அகங்காரத்தின் கூறு 3 தைசதம், வைகாரியம், பூதாதி
குற்றம் 5 காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்(மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்)
குணத்தின் கூறு 3 சாத்துவிகம், இராசதம், தாமதம்
வாக்கு 4 சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி
பிரகிருதி தன் முக்குணங்களால் மயக்குதல்
இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும் எனப் பார்த்தோம். முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாயிருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குணவயப்பட்டு இன்ப துன்ப மயக்கவுணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டான் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண் மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன ஆதலின் அவை போக்கிய காண்டம் என்று சொல்லப்படும். போக்கியம்நுகரப்படுவது; காண்டம்தொகுதி.
ஆன்ம தத்துவம்பெயர்க் காரணம்
இத்தத்துவங்கள் இருபத்துநான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்டவுருத்திரர். அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத் தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்ம தத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக் குறித்தது அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப் பெயர் பெற்றன. இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இவ்வாறன்றிச் சகலராகிய ஆன்மாக்களுக்குச் சிறப்பாக உரியனவாய் நிற்றல் பற்றி இத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும்.
இதுகாறும் நாம் விரிவாக அறிந்த செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். உலகுக்கு முதற் காரணம் மாயை. அது சுத்த மாயை, அசுத்த மாயை என் இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இப்பிரகிருதியேயாகும். பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.
ஆசிரியர் கீழிருந்து விளக்கிச் செல்லுதல்
பிரகிருதியிலிருந்து தொடங்கிப் பூதங்கள் முடியவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களையும் அவை தோன்றும் முறையிலே வைத்துக்காட்டினோம். இது தோற்ற முறையாகும். ஆயின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் இம்முறையினை மேற்கொள்ளவில்லை. அவர் கீழிருந்து தொடங்குகிறார். அஃதாவது பூதங்களை முதலில் விளக்கிப் பின் மேல் மேல் உள்ளவற்றை விளக்கிச் சொல்கிறார். ஆசிரியரது அணுகுமுறை பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்பதே அவர் பின்பற்றும் முறையாகும். தத்துவங்கள் அனைத்திலும் தூலமாய் உள்ளவை பூதங்களாகும் அவற்றின் காரியங்களே இவ்வுலகும், இதன்கண் உள்ள அளவற்ற பொருள்களுமாகும். இவ்வாறு பூதங்கள் தூலமாய், காரியப்பாட்டில் புலனாகும் பொருளாய் நிற்றலின், நமக்குத் தெரிந்த பொருளாகிய அவற்றையே முதலில் எடுத்துக் கொண்டு விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்.
ஐம்பூதங்களின் வடிவு
4. நாற்கோணம் பூமி, புனல் நண்ணு மதி யின் பாதி
ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் ஆர்க்கும்
அறுகோணம் கால் வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் ஆம் இவற்றால் உற்று.
பதவுரை
பூமி மண்
நாற்கோணம் நாற்கோண வடிவு உடையது
புனல் நீர்
மதியின் பாதி நண்ணும் பாதியாய் உள்ள சந்திரனைப் போல அரைவட்ட வடிவினதாய் இருக்கும்
அனல் நெருப்பு
முக்கோணம் ஏற்கும் முக்கோண வடிவைப் பொருந்தும்
எப்போதும் ஆர்க்கும் கால் எப்போதும் இயங்கி ஓசை செய்யும் காற்று
அறுகோணம் அறுகோண வடிவினதாகும்
ஆகாயம் வான்
வட்டம் வட்ட வடிவாய் இருப்பது
ஆன்மா உறு காயம் உயிர் வினைக்கு ஈடாகப் பொருந்துகின்ற தூல சரீரம்
இவற்றால் இப்பூதங்களின் பரிணாமத்தால்
உற்று ஆம் ஏற்பட்டு உயிருக்கு அமைந்ததாகும்
பொழிப்புரை
ஐம்பூதங்களுள் நிலம் நாற்கோண வடிவாய் இருக்கும்; நீர் பாதி மதி போல அரைவட்ட வடிவாய் இருக்கும்; நெருப்பு முக்கோண வடிவாய் இருக்கும்; காற்று அறுகோண வடிவாய் இருக்கும்; வான் வட்ட வடிவாய் இருக்கும். உயிர் பெறுகின்ற உடம்பு இப்பூதங்களின் சேர்க்கையால் ஆனது.
விளக்கம்
நிலம் முதலிய ஐம்பூதங்கள் வட மொழியில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் எனப்படும். இவற்றுக்குரிய வடிவங்கள் மேற்கூறியவாறு ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்துள்ள பருவுடம்பு பஞ்ச பூதங்களின் கூட்டத்தால் அமைந்தது. உடம்பிலுள்ள என்பு, தசை, மயிர், தோல், நரம்பு என்பவை பிருதிவியின் கூறுகளாகும். சிறுநீர், குருதி, வியர்வைவ முதலியவை அப்புவின் கூறுகள், பசித்தீ, உடம்பில் வெப்பம் முதலியவை தேயுவின் கூறுகள், பிராண வாயு முதலியவை வாயுவின் கூறுகள். பத்து வகையான நாடிகள் ஆகாயத்தின் கூறுகளாகும். நமக்குப் புலப்படுகின்ற நிலம், நீர், முதலியவை தத்துவங்கள் அல்ல. இவை காரியப் பொருள்கள். இவற்றிற்குக் காரணமான பஞ்ச பூத தத்துவங்களுக்கே இங்கு வடிவம் முதலியவை கூறப்படுகின்றன.
பூதங்களின் நிறமும் எழுத்தும்
5. பொன்பார்; புனல்வெண்மை; பொங்கும் அனல் சிவப்பு
வன்கால் கருணை; வளர் வான்தூமம்என்பார்
எழுத்து ல வ ர ய அ பாராதிக்கு என்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது
பதவுரை
பார் பொன் மண் பொன்னிறம் உடையது
புனல் வெண்மை நீர் வெண்ணிறம் உடையது
பொங்கும் அனல் சிவப்பு ஓங்கியெழும் நெருப்பு செந்நிறம் உடையது
வன்கால் கருமை வலிமை பொருந்திய காற்று கருநிறம் உடையது
வளர் வான் தூமம் பரந்து விரிந்த ஆகாயம் புகை நிறம் உடையது
என்பார் இவ்வாறு ஐம்பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியால் கண்டுணர்ந்தார் கூறுவர்
பார் ஆதிக்கு மண் முதலிய இப் பூதங்களுக்கு உரிய,
எழுத்து அவைகளின் உடன் நின்று தொழிற்படுத்தும் வித்து எழுத்துக்கள்(பீஜ அக்கரங்கள்)
ல வ ர ய அ முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்
அது அவ்வெழுத்து(அப்பூதங்களில்)
என்றும் எப்போதும்
அழுத்தமதாய் நிற்கும் அழுந்தி நிற்கும்
பொழிப்புரை
மண் பொன்னிறம் உடையது. நீர் வெண்ணிறம் உடையது. பொங்கி எழும் இயல்புள்ள நெருப்பு செந்நிறம் உடையது வலிமை மிக்க காற்று கரு நிறம் உடையது. எங்கும் பரவி நிற்கும் ஆகாயம் புகை நிறம் உடையது. இவ்வாறு பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியில் கண்டுணர்ந்த பெரியோர் கூறுவர். மண் முதலிய பூதங்களை உடன் நின்று செலுத்தும் மூலம் எழுத்துக்கள் முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்.
விளக்கம்
மூல எழுத்து வடமொழியில் பீஜ அட்சரம் எனப்படும். பீஜம்வித்து, ஹ என்ற வித்தெழுத்து செய்யுளில் அ எனக் குறிக்கப்பட்டுள்ளது. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இறைவனது சத்தியாகிய திருவருள் எதனையும் நேராகத் தொழிற்படுத்தாது. அது சுத்த மாயையை ஊடகமாகவும் நிலைக்களமாகவும் கொண்டு நின்று பிறவற்றைத் தொழிற்படுத்தும் என்பது அறிதற்குரியது. மூல ஒலிகள் என்பவை சுத்த மாயையில் தோன்றுவன. அவை திருவருளுக்கு ஊடகமாகவும் நிலைக்களமாகவும் அமைகின்றன. திருவருள் அவற்றின் இடமாகக் கொண்டு பதிந்து நின்று அவற்றின் வழியாக ஐம்பூதங்களையும் செலுத்தும், அது பற்றியே மூல ஒலிகள் பூதங்களை உடன் நின்று செலுத்தும் என்று கூறப்பட்டது.
பூதங்களின் அடையாளம்
6. குறி குலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா
அறு புள்ளி ஆரமுத விந்துபிறிவின்றி
மண் புனல்தீக் கால் வானம் மன்னும் அடைவே என்று
ஒண்புதல்வா! ஆகமம் ஓ தும்.
பதவுரை
ஒண் புதல்வா சிறந்த மாணாக்கனே!
குறி அடையாளமாக
குலிசம் வச்சிராயுதத்தையும்
கோகனதம் தாமரையையும்
கொள்சுவத்தி பொருந்திய சுவத்திகத்தையும்
குன்றா அறுபுள்ளி குறையாத ஆறு புள்ளியையும்
ஆர் அமுத விந்து அமுதத் துளியையும்
அடைவே முறையே
மண் புனல் தீக்கால் வானம் மண்ணும் நீரும் தீயும் காற்றும் வானும் ஆகிய ஐம்பூதங்களும்
பிறவின்றி நீங்காமற் கொண்டு
மன்னும் என்று நிலை பெறும் என
ஆகமம் சிவாகமங்கள்
ஓதும் கூறும்
முதலில் அடையாளங்களை ஒரு வரிசையில் நிறுத்தி, மூன்றாம் அடியில் அவ்வடையாளங்களைக் கொண்டுள்ள பூதங்களை அதே வரிசையில் முறையே நிறுத்தியுள்ள பான்மையைக் காணலாம். எனவே, மண்ணிற்கு வச்சிரப் படையும், நீருக்குத் தாமரையும், தீக்குச் சுவத்திகமும், காற்றுக்கு ஆறு புள்ளியும், வானுக்கு அமுதத் துளியும் அடையாளங்களாம் என்பது விளங்கும். சுவத்திகம் என்பது ஸ்வஸ்திக் என்ற வடிவம். இதனை தமிழில் இருதலை மேழி என்பர்.
பொழிப்புரை
நன்மாணாக்கனே! மண்ணைக் குறிக்கும் அடையாளம் வச்சிராயுதம்; நீருக்கு அடையாளம் தாமரைப்பூ; நெருப்பிற்கு அடையாளம் கவத்திகம்; காற்றுக்கு அடையாளம் ஆறு புள்ளி; வானுக்கு அடையாளம் அமுதத் துளி. இவ்வாறு சிவாகமம் கூறும்.
அதிதெய்வங்களும் அவர்கள் தொழில்களும்
7. பாராதி ஐந்துக்கும் பன்னும் அதி தெய்வங்கள்
ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் ஓரோர்
தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்கள் பார்.
பதவுரை
பார் ஆதி மண் முதலிய
ஐந்துக்கும் ஐந்து பூதங்களுக்கும்
பன்னும் (சிவாகமங்கள்) சொல்லுகின்ற
அதி தெய்வங்கள் அதி தெய்வம் ஆவார்
ஆர் ஆர் யார் யார்? என்றால்
அயன் ஆதி பிரமன் முதலிய
ஐவராம் ஐவரும் ஆவர்
ஓரோர் தொழில் ஒவ்வொரு தொழில்
அவர்க்குச் சொல்லுங்கால் அவர்களுக்குச் சொல்லப்படும் அங்ஙனம் சொல்லுங்கால்
தோற்றம் முதல் ஐந்தும் படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தினையும்
பழுது அறவே குற்றமின்றி
பண்ணுவர்கள் அவர்கள் செய்வார்கள்
பார் இதனை அறிவாயாக
பொழிப்புரை
நிலம் முதலிய ஐம்பூதங்களுக்கும் உரிய அதிதெய்வங்களை ஆகமங்கள் குறிப்பிடும். பிரமன் முதலிய ஐவரே அந்த அதிதெய்வங்கள். அவர்கள் முறையே படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்வர்.
விளக்கம்
இச்செய்யுளில் அதிதெய்வங்களையும், அவர்கள் தொழில்களையும் தொகுத்துக் கூறினார் ஆசிரியர் அடுத்த செய்யுளில் வகுத்துக் கூறுவார்.
அதி தெய்வங்களின் தொழில்களை வகுத்துக் கூறுதல்
8. படைப்பன் அயன். அளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் திடப்பெறவே
என்றும் திரோபவிப்பார் ஈசர்; சதாசிவரும்
அன்றே அநுக்கிரகர் ஆம்
பதவுரை
சொல்லில் முந்திய செய்யுளில் தொகுத்துக் கூறிய தொழில்களை இங்கு வகுத்துக் கூறினால்
அயன் பிரம தேவன்
படைப்பன் படைத்தல் தொழிலைச் செய்வான்
பங்கயக் கண் மாயன் தாமரை போன்ற கண்களை உடைய மாயோன்
அளிப்பன் காத்தல் தொழிலைச் செய்வான்
உருத்திரனும் உருத்திரனும்
துடைப்பன் அழித்தலைச் செய்வான்
திடம் பெறவே உயிர்கள் உறுதி அடையும் படி
ஈசர் மகேசுரர்
என்றும் எப்பொழுதும்
திரோபவிப்பர் மறைத்தலைச் செய்வார்
அன்றே (மறைத்தல் தொழிலின் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு) அப்பொழுதே
சதாசிவரும் சதாசிவரும்
அனுக்கிரகர் ஆம் அருளும் தொழிலைச் செய்வார்
பொழிப்புரை
பிரமன் படைத்தல் ஆகிய தொழிலைச் செய்வான் மாயோன் ஆகிய திருமால் காத்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உருத்திரன் அழித்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உயிர்கள் பக்குவம் பெறுதற் பொருட்டு என்றும் மறைத்தல் ஆகிய தொழிலைச் செய்பவர் மகேசுரர். அதன் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு அப்பொழுதே அருள்புரியும் தொழிலைச் செய்பவர் சதாசிவர்.
விளக்கம்
ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம்.
படைத்தல்
படைத்தலாவது இல்லாததைத் தோற்றுவித்தல் அன்று. இல்லாதது என்றும் இல்லாததேயாம். அதனை ஒரு காலத்தில் தோன்றச் செய்ய முடியாது. முயலின் தலையில் கொம்பு என்பது இல்லாதது. அதனை எக்காலத்திலேனும் தோற்றுவிக்க முடியுமா? ஆதலால் படைத்தல் என்பதற்கு உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதே கருத்தாகும். உள்ளதை ஏன் தோற்றுவிக்க வேண்டும்? அதுதான் உள்ளதாயிற்றே என வினவலாம். உள்ளது என்பதன் பொருளை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று காரணநிலை; மற்றொன்று காரியநிலை. காரணநிலையாவது ஒரு பொருள் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கிப் புலப்படாதிருக்கும் நிலையாகும். காரிய நிலையாவது அப்பொருள் தனது காரண நிலையிலிருந்து வெளியே புலப்பட்டு நிற்கும் நிலையாகும். களிமண்ணால் ஆகிய குடத்தை எடுத்துக் கொள்வோம். குடமானது தோன்றுவதற்கு முன்னே தனது காரணமாகிய களிமண்ணில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது. அதுவே குடத்தின் காரணநிலை. பின் வனைபவனின் முயற்சியால் அது வெளிப்பட்டுப் புலப்படும் நிலையை எய்தியது. இந்நிலையே காரிய நிலை. இவ்விரு நிலைகளும் எல்லாப் பொருள்களுக்கும் உண்டு. காரணநிலையில் புலப்படாமல் உள்ள பொருளைப் புலப்படும் காரி நிலைக்குக் கொண்டு வருதலே படைத்தல் அல்லது தோற்றுவித்தல் எனப்படும். உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதன் பொருள் இதுவேயாகும். உலகைப் படைத்தல் என்பதனை இந்த வகையில் நாம் நோக்க வேண்டும். படைப்பதற்கு முன்னும் உலகம் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது என்று கொள்ள வேண்டும். குடத்திற்கு மூலகாரணமாய் நிற்பது களிமண். அதுபோல உலகிற்கு மூலமாய் நிற்பது எது? அதுவே மாயை. மாயை என்னும் மூலப் பொருளைப் பற்றி நாம் முன்பே விரிவாக அறிந்துள்ளோம். அந்த மாயையிலே தான் இந்த உலகம் ஒடுங்கியிருந்தது. அதிலிருந்து உலகை வெளிப்படுமாறு செய்தலே படைத்தல் தொழில் என்பதாகும். இவ்வுலகானது உடல், கருவி, நிலம், நுகர்ச்சிப் பொருள் என நான்காகப் பாகுபட்டு நிற்கும். இவை தனு, கரணம், புவனம், போகம் எனப்படும். இவற்றைத் தோற்றுவித்து உயிர்களோடு பொருத்துதலே படைத்தல் தொழிலாகிறது.
காத்தல்
உடம்பைப் பெற்ற உயிர்கள் உலகிடைப் போக்குவரவு புரிகின்றன. அறிகருவிகள், தொழிற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து பயன் கொள்ளுகின்றன. வினைகளைச் செய்கின்றன. வினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகர்கின்றன இவ்வாறு வினை நுகர்ச்சியின் பொருட்டு, உயிர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றைக் குறித்த காலம் வரை நிற்கும்படி செய்தலே காத்தல் தொழிலாகும்.
அழித்தல்
இனி, உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து, அவற்றின் காரணத்தில் ஒடுக்குதலே அழித்தல் தொழில் எனப்படுகிறது. எந்த உயிரும் தனக்குக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உலகையும் விட்டுப் பிரிவதை விரும்புவதில்லை. சாவு என்பது உயிருக்குச் செல்ல முடியாத துன்பமாகும். சற்று முன் வரை நன்றாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவர் துடுமென மாண்டு விழுவதைக் காணும்போது அவரைச் சார்ந்தவர் மனம் என்ன பாடுபடுகிறது? இறைவனே இது என்ன அநியாயம்? உனக்குக் கண்ணில்லையா? என்று கதறுகிறார்கள். இப்படிப்பட்ட அழித்தலை இறைவன் செய்தல் நன்றோ? என ஐயுறலாம், ஓர் எடுத்துக்காட்டினால் இதற்கு விடைகூறலாம். மகன் நோய்வாய்ப்பட்டு இளைத்திருந்தான். தந்தை மிகவும் கவலைப்பட்டார். மருத்துவர் வந்து பார்த்தார். பையனுக்கு இப்பொழுது முழு ஓய்வு தேவை. படிப்பது கூட அவனது நிலையைப் பாதிக்கலாம். என்று கூறிச் சென்றார். அவர் சொன்ன அறிவுரையைப் பையன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வெளியே சென்று விளையாட விரும்பினான். ஆனால் தந்தையார் அனுமதிக்க வில்லை. இரவு நேரத்தில் கண் விழித்துப் படிக்க விரும்பினான்; அதற்கும் தந்தையார் விடவில்லை புத்தகத்தை எடுத்துப் பூட்டி வைத்தார். விளக்கை அணைத்து விட்டார் இதையெல்லாம் கண்டு மகனுக்கு ஆத்திரம் வந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அப்பாவாயிற்றே! மகனுடைய பார்வையில் தந்தையின் செயல் கொடுமையானதாகத் தெரிகிறது. ஆனால் மகன் மீது கொண்ட அன்பினால் அல்லவா தந்தை இப்படியெல்லாம் செய்கிறார்? விளையாட்டுப் பொருளை அவனிடமிருந்து விலக்கி வைக்கிறார். விளக்கை அணைத்து வைக்கிறார்; புத்தகத்தை அவனிடமிருந்து பிரித்து வைக்கிறார். இத்தந்தையின் செயல் போன்றது இறைவன் செயல். வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களை மாறி, மாறி நுகர்ந்த உயிர்கள் அதனால் இளைப்பு எய்தி நிற்கும். அவ்இளைப்பினை நீக்கக் கருதுகிறான் இறைவன். அதன் பொருட்டே உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து வைக்கிறான் உயிர்களின் பார்வையில் இச்செயல் கொடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால், உயிர்களின் மீது கொண்ட கருணையினால் அல்லவா இறைவன் இப்படிச் செய்கிறான் என்பது புலனாகும்; இறைவன் அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்பது விளங்கும். மேற்கூறிய முத்தொழில்களும் மாயாகாரியமாகிய சடப்பொருள்களிடத்தே இறைவன் செய்கின்ற தொழில்களாகும். சடமாகிய உடம்பு முதலியவற்றைத் தோற்றுவித்தல் அவற்றை நிலைநிறுத்துதல், பின் அவற்றை ஒடுக்குதல் என்பது பற்றி இவ்வுண்மை அறியப்படும். இனிச் சித்தாகிய உயிரினிடத்தே செய்கின்ற தொழில்களே அடுத்து வரும் மறைத்தலும், அருளலும் ஆகும்.
மறைத்தல்
மறைத்தலாவது, மாயை கன்மங்களைச் செயற்படுத்தி உயிர்களைப் பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழலச் செய்தல். இதற்கு மறைத்தல் என்ற பெயர் ஏன்? எனில், மாயை கன்மங்கள் செயற்படும் பொழுது உயிர்களுக்கு மெய்யுணர்வு ஆகிய பேரறிவு தோன்றாமல், மயக்கவுணர்வு ஆகிய சிற்றறிவே தோன்றும். அச்சிற்றறிவு உயிர்களை உலகப் பொருள்களோடு பிணித்து அப்பொருள்களையே மேலும் மேலும் பெற்றுத் துய்க்கும் படியான நாட்டத்தைச் செய்யும். இறைவனை நோக்கவிடாது உலகையே நோக்கி நிற்கச் செய்யும். அதன் காரணமாக உயிர்கள் பல அல்லல்களை அடையும். இவ்வாறு உயிர்கள் தம்மையும், தலைவனையும் அறியாது மயங்கி நிற்கச் செய்தலின் அவ்வகையில் இறைவனது செயல் மறைத்தல் எனப்படுகிறது. மறைத்தலை இறைவன் ஏன் செய்ய வேண்டும்? என வினவலாம். ஆணவமாகிய நோய்க்கு மருந்தாகவே உயிர்களுக்கு மாயை கனமங்களைச் சேர்க்கின்றான். அவற்றின் வயப்பட்ட உயிர்கள் உலக வாழ்வில் பல அல்லல்களை அடைகின்றன. இவ்வாறு உயிர்களை உழலச் செய்தலின் பயன், ஆணவ மலத்தின் சத்தி தொழிதலேயாகும் ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். தெரு முனையில் ஒரு சிறிய காபிக் கடை. கடையின் முன்னே பெருங்கூட்டம் நாம் மெய் வருத்தம் பாராது முட்டி மோதி உள்ளே புகுந்து கடைக்காரனை அடைகிறோம். அவன் ஒரு சிறிய கண்ணாடித் தம்ளரில் (அதை அவன் எங்குதான் கண்டுபிடித்து வாங்கினானோ) காபியை சுடச்சுட ஊற்றிக் கொடுக்கிறான். வாய் பொறுக்காத அளவுக்குச் சூடு. கையில் கூட வைத்திருக்க முடியவில்லை. அருகில் இருந்த பலகையில் அதை வைக்கிறோம். நேரம் போகிறதே தவிரச் சூடு போகவில்லை. நாமோ விரைந்து போக வேண்டும். ஆகவே கடைக்காரனிடம் அப்பா கொஞ்சம் ஆற்றிக் கொடு என்கிறோம். அவன் வெறுமையாக இருந்த மற்றொரு தம்ளரை எடுத்துக் கொண்டு இதையும் அதையும் மேலும் கீழுமாக வைத்துக் கொண்டு காபி வானுக்கும் மண்ணுக்குமாகப் போய் வரும்படி ஆற்றுகிறான்! ஒரு துளி கூடச் சிந்தவில்லை(காபி ஆற்றுவதும் ஒரு கலைதான்) பிறகு நம் கையில் தருகிறான். இப்பொழுது சூடு தணிந்து விட்டது. காபியைத் தம்ளரிலேயே அசையாமல் வைத்திருந்தால் அதன் சூடு குறையப் போவதில்லை. அதையே மேலும் கீழுமாகச் செலுத்தியவுடன் அதன் சூடு தானாகத் தணிந்து போயிற்று. அதே போல, உயிரானது இயக்கமற்றுக் கிடந்தால் அதனைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கப் போவதில்லை. அது கருதியே இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி உயிரைச் செயற்படுத்துகின்றான். உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தியும், இளைப்பாற்றியும் வருகின்றான் இவ்வாறு உயிர் செயற்படச் செயற்பட அதனைப் பற்றியுள்ள ஆணவமும் செயற்பட்டு அதன் சத்தி மெல்ல மெல்லத் தேய்ந்து மெலிகிறது. அதன் பொருட்டே இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று மறைத்தல் தொழிலைச் செய்கின்றான். ஆணவத்தின் சத்தி மெலிவடைகிறது என்றால் அதன் மறைப்பு நீங்கி உயிரின் அறிவு வளர்ந்து வருகிறது என்பது கருத்தாகும். அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்று முன்னே கூறினோம். அதே போல மறைத்தலைச் செய்வதும் உயிர்களின் அறிவை வளர்த்து உய்வித்தற் பொருட்டே என்பதை உணர்தல் வேண்டும்.
அருளல்
இனி அருளலாவது, உயிர்கள் அறிவு முதிர்ந்த பக்குவ நிலையில் தம்மை உணர்ந்து அதனாலே தலைவனையும் உணர்ந்து, பிறப்பு இறப்புக்களினின்றும் நீங்கி வீடு அடையும்படி செய்தலாகும். இதுவரை ஐந்தொழில்களைப் பற்றி விளக்கமாக அறிந்தோம். ஐந்தொழில்களில் படைத்தல் முதலிய மூன்றினையும் செய்வோர் பிரமன், மால், உரத்திரன் என்பத பலரும் அறிந்தது. ஏனைய மறைத்தலையும் அருளலையும் மகேசுரரும் சதாசிவரும் செய்வர். இவ்வாறு பலர் கூறப்படினும் உண்மையில் எல்லாவற்றையும் செய்பவன் சிவபெருமான் ஒருவனே என்பது உளங் கொள்ளுதற்குரியது சிவபிரானது ஓர் அதிகார சத்தியே அவரவரிடத்தில் நின்று அவ்வச் செயலை ஆற்றுகிறது. இந்நாளில் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வருக்கே எல்லா அதிகாரமும் உண்டு. அவருக்குக் கீழ் பல அமைச்சர்கள் இருப்பினும் அவர்களுக்கென்று சுதந்திரமாக எந்த அதிகாரமும் இல்லை முதல்வரது கருத்திற்கு மாறாக ஒரு சொல் கூறினாலும் அவர் பதவியில் இருக்க முடியுமா? இஃது எதைக் காட்டுகிறது? அமைச்சர்க் கென்று தனி அதிகார சத்தியில்லை என்பதைத் தானே காட்டுகிறது. மேலும் எந்த அமைச்சர் எந்தத் திட்டத்தை நிறைவேற்றினாலும் அது முதல்வர் நிறைவேற்றிய திட்டம் என்று தானே சொல்லப்படுகிறது. எனவே அமைச்சர்களிடத்தில் உள்ள அதிகார சத்தி முதல்வருடைய அதிகார சத்தியே என்பது விளங்கும். அது போலத் தவ மிகுதி காரணமாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் அதிகாரிகள் ஆனோர் பிரமன் முதலியோர் அவர்களிடத்து நின்று அவர்களை வாயிலாகக் கொண்டு செய்விப்பது சிவசத்தியேயாகும். எனவே எல்லாச் செயல்களும் சிவனுடைய செயல்களேயாம்.
ஐந்தொழில் இரண்டாய்ச் சொல்லப்படுதல்
இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று, உயிர்களைப் பிறப்பு இறப்புக்களில் மீள மீளச் செலுத்தி, உலக நுகர்ச்சியில் அழுத்தியும் இளைப்பாற்றியும் வருவதே மறைத்தல், ஆதலின் இம் மறைத்தல் தொழிலில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் அடங்கும் என்பது ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும். எனவே ஐந்தொழிலும் மறைத்தல், அருளல் என்ற இரண்டாய் அடங்கும் என்பது விளங்கும். மறைத்தல் பந்தம் என்றும், அருளல் வீடு என்றும் கூறப்படும். பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு என வரும் திருவாசக அடியில் (திருப்பொற்சுண்ணம் 20) ஐந்தொழிலும் இவ்வாறு இரண்டாய்ச் சொல்லப்பட்டமை காணலாம்.
முத்தொழிலில் அடக்கிக் கூறுதல்
பல சமயத்தவரும் பொதுவாகக் கொள்வது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையே, அதற்கேற்ப ஐந்தொழிலை முத்தொழிலில் அடக்கிக் கூறலாம். அங்ஙனம் கூறும் போது, மறைத்தல், காத்தல் தொழிலில் அடங்கும்; அருளல் அழித்தல் தொழிலில் அடங்கும்.
திடப் பெறவே
இச் செய்யுளில் ஆசிரியர் பிற தொழில்களை வாளா கூறி, மறைத்தல் தொழிலை மட்டும் திடப் பெறவே, என அடைகொடுத்துக் குறித்துள்ளமை நோக்குதற்குரியது. ஏனைய தொழில்களை மாணாக்கர் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மறைத்தல் தொழிலை விளங்கிக் கொள்ளுதல். அத்துணை எளிதன்று. அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ளுதலும் எளிதன்று. அதனைக் கருதியே ஆசிரியர்அடைமொழி தந்து, மறைத்தலின் நோக்கத்தைக் கிளந்தெடுத்துக் கூறுகின்றார். திடப் பெறவே என்பதற்கு உறுதியடையும் படி என்பது பொருள். உயிர்கள் உறுதியடையும்படி மறைத்தலைச் செய்கின்றான் என்பது கருத்தாகிறது. உறுதியடைதல் என்றால் என்ன?
ஆணவ மலத்தின் தூண்டுதலால் உயிர் யான் யான் என்று எச்செயலுக்கும் தன்னையே தலைவனாகக் கொண்டு செருக்குற்று நிற்கும். இறைவனது மறைத்தல் தொழிலால் உயிர் பிறப்பு இறப்புக்களில் மாறி மாறிச் சுழன்று அளவிலாத் துயரங்களை மாறி மாறி அனுபவிக்கும் போதுதான் உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தி குறையும். அறியாமை தேய்ந்து நல்லுணர்வு தோன்றும். தனக்கென ஒரு செயலும் இல்லை என்பதையும், எல்லாம் அவன் செயல் என்பதையும் சிறிது சிறிதாக உணரும்.
இதுவரை தன்னையே பெரிதாக மதித்திருந்த உயிர் இப்பொழுது இறைவனே என் வாழ் முதலாகிய பொருள் என்ற உறுதியைப் பெறும். ஆடை நெய்யுமிடத்தில் நூல் இழைகளின் ஊடே இங்குமங்கும் மாறி மாறி ஓடும் குழல் போல எனது உள்ளம் உலக ஆசைகளிற் பட்டு அலைந்தது அதனால் உன்னை மறந்தேன். மயக்கத்தைச் செய்யும் உடம்பிலே கிடந்து இளைத்தேன். உடையாய், அடியேன் உன் அடைக்கலம். என்று இறைவனிடம் முறையிடும். உலகத்தை நோக்காது இறைவனையே நோக்குகின்ற இந்த உறுதிதான் உயிரின் பக்குவ நிலையாகும். இந்த உறுதி நிலையை உயிர்கள் பெறும் பொருட்டே இறைவன் மறைத்தல் தொழிலைச் செய்கின்றான்.
இவ்வாறெல்லாம் விரித்துப் பொருள் கொள்ளும் படியாக் திடப் பெறவே என்ற சிறிய அடைமொழியை அமைத்துள்ள ஆசிரியரின் சொல்லாட்சி எண்ணி மகிழ்தற்குரியது.
ஐம்பூதங்களின் செய்தித் தொகுப்பு
இதுவரையிலும் நாம் அறிந்த ஐம்பூதங்களின் வடிவம் முதலிய செய்திகளை இங்கே தொகுத்துக் கூறுவோம்.
பிருதிவி(மண்)
வடிவம் நாற்கோணம்
நிறம் பொன்மை
குறி(அடையாளம்) வச்சிராயுதம்
எழுத்து லகர மெய்
அதி தெய்வம் பிரமன்
அப்பு(நீர்)
வடிவம் அரைவட்டம்
நிறம் வெண்மை
குறி தாமரைப்பூ
எழுத்து வகர மெய்
அதி தெய்வம் திருமால்
தேயு(தீ)
வடிவம் முக்கோணம்
நிறம் செம்மை
குறி சுவத்திகம்
எழுத்து ரகர மெய்
அதி தெய்வம் உருத்திரன்
வாயு(காற்று)
வடிவம் அறுகோணம்
நிறம் கருமை
குறி ஆறு புள்ளி
எழுத்து யகர மெய்
அதி தெய்வம் மகேசுரன்
ஆகாயம்(வான்)
வடிவம் வட்டம்
நிறம் புகைமை
குறி(அடையாளம்) அமுத விந்து
எழுத்து ஹ
அதி தெய்வம் சதாசிவன்
பூதங்களின் குணமும் செயலும்
9. மண் கடின மாய்த் தரிக்கும்; வாரிகுளிர்ந் தே பதமாம்
ஒண் கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் வண்கால்
பரந்து சலித் துத்திரட்டும் பார்க்கில் ஆ காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.
பதவுரை
பார்க்கில் ஆராய்ந்து பார்த்தால்
மண் கடினமாய் மண் திண்மைக்குணம் உடைய தாய்
தரிக்கும் பொருள்களைத் தாங்கும்
வாரி நீர்
குளிர்ந்தே குளிர்ச்சிக் குணம் உடையதாய்
பதமாம் பொருள்களை மென்மைப் படுத்தும்
ஒண்கால் ஒளி பொருந்திய தீ
சுட்டு வெம்மைக்குணம் உடையதாய்
ஒன்றுவிக்கும் பொருள்களை நீறாக்கி ஒன்றுபடுத்தும்
வண்கால் வளமையுடைய காற்று
ஓவாமல் ஒழியாமல்
பரந்து சலித்து எங்கும் பரவி இயங்கி
திரட்டும் பொருள்களைத் திரட்டும்
ஆகாயம் ஆகாயம்
நிரந்தரம் ஆய் வெளியாதல் ஆகிய குணம் உடையதாய்
நிறைந்து நிற்கும் எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும்
குறிப்பு: ரந்திரம்வெளி, அதனோடு நி என்பது சேர்ந்து நிரந்தரம் என்றாயிற்று. நி என்பதற்குத் தனிப்பொருள் ஏதும் இல்லை.
பொழிப்புரை
மண்ணின் குணம் திண்மை; செயல், எப்பொருளையும் தாங்குதல். நீரின் குணம் தண்மை, செயல், பொருள்களை மென்மைப்படுத்துதல், காற்றின் குணம் அசைவு(சலனம்) செயல், பரந்து கிடக்கும் பொருள்களை ஒருங்கு திரட்டுதல், ஆகாயத்தின் குணம் வெளியாதல்; செயல் எப்பொருளுக்கும் இடங்கொடுத்தல்.
விளக்கம்
இச்செய்யுளில் கூறப்பட்ட பூதங்களின் குணங்களையும் தொழில்களையும் பின்வரும் அட்டவணையில் நிரல்படக் காணலாம். பூதத்தின்கண் உள்ளதாய் உணரப்படும் இயல்பு குணம் என்றும், அதனால் பிற பொருளின்கண் நிகழும் விளைவு செயல் என்றும் கொள்ள வேண்டும். காரணமாகிய தத்துவங்களில் இவை இருத்தலால்தான் காரியப் பொருள்களிடத்தும் காணப்படுகின்றன.
பூதங்கள் குணம் தொழில்
மண் திண்மை பொருளைத் தாங்குதல்
நீர் குளிர்ச்சி பொருளை மென்மைப்படுத்துதல்
தீ வெம்மை பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்
காற்று அசைவு பொருளைத் திரட்டுதல்
வான் வெளியாதல் பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்
இனி, ஐம்புலன்
10. உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்
ஆசை தரும் ஐம்புலனே யாம்.
பதவுரை
உன்றனக்கு (நன்மாணாக்கனே) உனக்கு
மாபூதம் பெரும் பூதங்களின் இயல்பை
உள்ளபடி உள்ளவாறு
ஓதினோம் விளக்கிச் சொன்னோம்
கள்ளிகும் ஐம்புலனும் இனி, மனத்தைக் கவரும் ஐம்புலன்களை
கட்டுரைக்கில் எடுத்துச் சொல்வதாயின்
ஓசை பரிசம் உருவம்
சுவை நாற்றம் ஓசையும், ஊறும், உருவமும், சுவையும், மணமும் என்பவை
ஆசை தரும் ஆசையை மிகுவிக்கும்
ஐம்புலனேயாம் ஐம்புலன்களாகும்
பொழிப்புரை
இதுவரை தூல பூதங்களின் இயல்பை உள்ளவாறு எடுத்துரைத்தோம். இனி, மனத்தைக் கவர்ந்து வசஞ்செய்யும் ஐம்புலன்கள் இவை எனச் சொல்வோம். அவை ஓசை, பரிசம், உருவம், சுவை, மணம் என்பன. இவை ஆசையை மிகுவிப்பனவாகும்.
விளக்கம்
ஐம்புலன் என்பதற்குச் சிலர் கூறும் பொருள்
தூல பூதங்களைக் கூறிய பின்னர் அடுத்துக் கூற வேண்டுவது அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் உள்ள தன்மாத்திரைகளை ஆனால் ஆசிரியர் தன்மாத்திரைகளைப் பற்றிக் கூறாமல் ஐம்புலன்களைப் பற்றிக் கூறுலுறுகின்றார். அதனால் இச்செய்யுள் சிலருக்குத் தடுமாற்றத்தை உண்டாக்கியிருப்பதில் வியப்பில்லை. இவ்விடத்தில் ஐம்புலன்களைக் கூறுதற்கு ஏதும் இயைபில்லையே என்று கருதிய அவர்கள் ஐம்புலன் என்றதற்குத் தன்மாத்திரைகள் என்றே பொருள் எழுதிச் சென்றார்கள். அவ்வாறு பொருள் கூறுதல் பொருந்துமா என்பதை நோக்குதல் வேண்டும்.
ஆசிரியர் வாளா ஐம்புலன் என்று கூறியிருந்தால் அதற்குத் தன்மாத்திரைகள் என்று பொருள் கூறுதல் பொருந்துவதாகலாம். எவ்வாறெனில், ஓசை முதலிய ஐந்தும் பொறிகளால் கொள்ளப்படும் சிறப்பு நிலையை எய்திய பொழுது புலன் எனப்படும். அவை செவி முதலிய பொறிகட்குப் புலனாகாமல் நுண்மையாய் நிற்கும் நிலையும் உண்டு. அந்நிலையில் அவை தன்மாத்திரைகள் எனப்படும். புலனாகாமை பற்றி அவற்றை நுண்புலன்கள் என்றும் கூறலாம். அம்முறையில் செய்யுளில் ஐம்புலன் என்றும் மட்டும் கூறியிருந்தால் நுண்புலன்களை அவை குறிப்பதாகக் கொண்டு தன்மாத்திரைகள் எனக் கூறுதற்கு இடம் உண்டு.
அடை மொழிகளால் ஆசிரியர் உணர்த்துவது
ஆசிரியர் ஐம்புலனைக் குறிப்பிடும் இரண்டு இடங்களிலும் அடை மொழி புணர்ந்துக் கூறியுள்ளார். கள்ளமிகும் ஐம்புலன் என்றும் ஆசை தரும் ஐம்புலன் என்றும் கூறியுள்ள அடை மொழிகளை நோக்குதல் வேண்டும். ஓசை முதலிய ஐந்தும் பூதங்களின் குணங்களாய் வெளிப்பட்டு நின்று செவி முதலிய பொறிகளால் கொள்ளப்படும் போதே அவை நம் மனத்தைப் பற்றுகின்றன. ஆசையை மிகுவிக்கின்றன. இவ்வகையில் அவை பொறிகளுக்கு விடயங்கள் ஆகின்றன. தன்மாத்திரைகள் அங்ஙனம் பொறிகளுக்கு விடயம் ஆவதுமில்லை. ஆசையை மிகுவிப்பதும் இல்லை. எனவே ஆசிரியர் அமைத்துள்ள அடை மொழிகளை நோக்கினால் அவர் இங்கே தன்மாத்திரைகளைக் குறிக்கவில்லை என்பதும் புலப்படும். நிலையினவாகிய ஐம்புலன்களையே குறிப்பிட்டார் என்பதும் தெளிவாகும்.
தன்மாத்திரைகளைக் கூறாமல் புலன்களைக் கூறிய காரணம்
தன்மாத்திரைகளே தத்துவங்கள் என்றும், ஐம்புலன்கள் என்பவை புலப்படும் குணங்களாகிய தாத்துவிகங்கள் என்றும் முன்னே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இவ்விடத்தில் தன்மாத்திரைகளைக் கூறுதலே முறை. அதை விடுத்துத் தாத்துவிகங்கள் ஆகிய புலன்களைக் கூறியிருப்பது எக்காரணம் பற்றி? என வினவலாம். ஆசிரியரின் அணுகு முறையைப் பற்றி முன்னேயே கூறியுள்ளோ. தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் பெறவைத்தல் என்பது அவர் பின்பற்றும் முறையாகும். நமக்கு நன்கு தெரிந்தவை ஐம்புலன்களாகிய விடயங்கள். சிறப்பு நிலையில் விளங்கி நிற்கும் குணங்களாகிய அப்புலன்களை எடுத்துக் காட்டி, அவற்றிற்கு மூலமாய் பொதுமையில் விளங்காது நுட்பமாய் நிற்கும் நிலைகள் உண்டு எனவும், அவையே தன்மாத்திரைகள் எனவும் குறிப்பாய் உணர்த்தினார் ஆசிரியர். குணமாதல் ஒப்புமை பற்றியும், பருப்பொருளாக வைத்து முதற்கண் உணர்த்துதல் எளிமையாதல் பற்றியும் புலன்களே இங்குக் குறிக்கப் பெற்றன எனக் கொள்ளலாம்.
இனி, ஞானேந்திரியங்கள்
ஞானேந்திரியங்கள் ஆகிய அறிகருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. மெய் என்பது உற்று அறிவதாகிய தோலினைக் குறிக்கும். வாய் என்பது சுவைத்து அறிவதாகிய நாக்கினைக் குறிக்கும். இவை தோன்றும் முறையினை முன்னே அறிந்தோம். இவை புலன்களை அறியும் முறையினை இப்போது காண்போம்.
அறிதலின் இரண்டு வகை
ஆன்மா ஞானேந்திரியங்கள் ஆகிய இவ் வைம்பொறிகளைக் கொண்டு புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐம்புலன்களைப் பொதுவாக அறியும். பொதுவாக அறிதல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளக்கலாம். தொலைவில் ஒருவர் வருகிறார். முதலில் நம் கண்களுக்கு ஏதோ ஓர் உருவம் என்ற அளவில் மட்டுமே தெரிகிறது. பிறகு அவர் நெருங்கி வரவர அவரைப் பற்றிய விவரங்கள் தெரிகின்றன. அவரது பெயர் இன்னது என்று தெரிகிறது. கன்னங்கரிய அவரது நிறம் தெரிகிறது. தலையில் உள்ள வழுக்கை தெரிகிறது. அவர் அணிந்துள்ள சட்டைப் பையில் வைத்திருக்கும் பணம் கூடத்தெரிகிறது. அவரது நடையின் வேகமும் தெரிகிறது. இக்காட்சியில் முதலில் நம் கண்களுக்குத் தெரிந்தது இஃது ஓர் உருவம் என்ற அளவில் மட்டும்தான். இதுவே பொதுவாக அறிதல் என்பதாகும். பின்னர் பெயர், நிறம், தலையின் அமைப்பு, அணிந்துள்ள சட்டை, நடக்கும் பாங்கு முதலிய விவரங்கள் சிறப்பாகப் புலப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர் இன்னார் என்று வேறுபடுத்தி அறிகின்றோம். இது சிறப்பாக அறிதலாகும். இதனால் அறிவில் இரண்டு வகை உண்டு என்பது புலனாகும். ஒன்று பொருள்களைப் பொதுவாக அறிதல், மற்றொன்று பொருள்களைச் சிறப்பாக அறிதல்.
ஞானேந்திரியங்களால் நிருவிகற்பக் காட்சி நிகழ்தல்
செவி முதலிய ஞானேந்திரியங்கள் பொருள்களைப் பொதுவாக அறியுமேயன்றிச் சிறப்பாக அறியமாட்டா. செவி இஃது ஓர் ஓசை என்று மட்டுமே அறியும். தோல் இஃது ஓர் ஊறு என்று மட்டுமே என்று அறியும். கண் இஃது ஓர் உருவம் என்று மட்டுமே அறியும். நான்கு இஃது ஓர் சுவை என்று மட்டுமே அறியும். மூக்கு இஃது ஓர் மணம் என்று மட்டுமே அறியும்.
எனவே ஆன்மா ஞானேந்திரியங்களால் புலன்களைப் பொதுவாகவே உணரும் என்று சொல்லலாம். பொதுவாக அறிவதை நிருவிகற்பக் காட்சி என்பர். நிருவிகற்பம் வேறுபாடின்மை, ஒரு பொருளுக்குரிய பெயர், குணம், தொழில் முதலிய வேறுபாடுகள் ஏதும் தெரிய வாராமல் இஃது ஒன்று என்ற அளவில் மட்டும் அறிவதால் இது நிருவிகற்பக் காட்சி என்று குறிக்கப்பட்டது. இனி, அவ்வேறுபாடுகள் தெரிந்து இஃது இன்ன பொருள் என்று சிறப்பாக அறிதல் மனம் முதலிய அந்தக்கரணங்களில் செயற்பாட்டினால் விளைவதாகும். இவ்வாறு சிறப்பாக அறிவதை சவிகற்பகாட்சி என்பர். சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. அந்தக்கரணங்களினால் உண்டாகும் சிறப்புக் காட்சியைப் பற்றிப் பின்னால் (செய்யுள் 16) நாம் பார்க்க இருக்கின்றோம். இப்பொழுது ஞானேந்திரியங்களைப் பற்றி ஆசிரியர் வழியில் நின்று அறிந்து கொள்வோம்.
11. ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்
ஊன மிகு பூதம் உற்றிடமா ஈனமாம்
சத்தாதி யை அறியும் தானம் செவி தோல் கண்
அத்தாலு மூக்கென்று அறி.
பதவுரை
ஞானேந்திரியங்கள் ஞானேந்திரியங்களின் இயல்பை
நன்றா தெளிவாக
உரைக்கக் கேள் உரைக்கின்றோம் கேட்பாயாக.
(அவ்விந்திரியங்கள்)
ஊனம் மிகு தாமத குணம் மிகந்த
பூதம் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரைகளை
இடமா உற்று இடமாகக் கொண்டு
ஈனமாம் இழிந்தனவாகிய
சத்த ஆதியை ஓசை முதலிய விடயங்களை
அறியும் அறிந்து வரும்
தானம் அவ்விந்திரியங்கள் தங்கித் தொழிற்படும் இடமாகிய உறுப்புக்கள்
செவி தோல் கண் செவியும், தோலும், கண்ணும்
அத்தாலு மூக்கு என்று அந்த நாக்கும் மூக்கும் என்று
அறி அறிவாயாக.
பொழிப்புரை
ஞானேந்திரியங்கள் ஆகிய ஐம்பொறிகளின் இயல்பை யாம் விளக்கமாகச் சொல்வோம். நீ கேள். ஞானேந்திரியங்கள், சூக்கும பூதங்கள் எனப்படும் தன் மாத்திரைகளைத் தமக்கு இடமாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களை அறிந்துவரும். அவ் இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உறுப்பில் நின்று ஒவ்வொரு புலனைக் கவரும். அவற்றிற்கு இடமாகிய உறுப்புகள் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்று அறிவாயாக.
விளக்கம்
இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளவை
தமிழில் செவி முதலிய உறுப்புக்களின் பெயரே அவ்விடங்களில் நின்று அறியும் இந்திரியங்களுக்கும் பெயராக வழங்குகின்றன. அவ்வவ் உறுப்புக்களில் இருந்து அறியும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் கூறியுள்ளது நினைவிருக்கலாம். எனவே இந்திரியங்களுக்கு இடமாவன உறுப்புக்கள் என்பது விளங்குகிறது. இனி, சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளும் இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளன என்று கொள்ளப்படுகிறது. அவ்வாறாயின், இந்திரியங்களுக்கு உறுப்புக்களும் இடம்; தன்மாத்திரைகளும் இடம் என்று ஆகிறது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஓர் உவமையின் மூலம் இதனை விளக்குவோம்.
ஊர்தியும் நிலமும் உவமையாதல்
ஒருவன் ஊர்தியில் ஏறிச் செல்கிறான். அவனுக்கு அவ்ஊர்தி நேரே இடமாய் அமைகிறது. அந்த ஊர்திக்கு இடமாய் உள்ளது நிலம். அம்முறையில் நிலமும் அவனுக்கு இடமாகிறது. இந்திரியம் ஊர்தியில் செல்பவனைப் போன்றது. தன்மாத்திரை ஊர்தி போன்றது. உறுப்பு நிலம் போன்றது. இதனால், இந்திரியங்களுக்குத் தன்மாத்திரைகள் நேரே இடம் என்பதும், உறுப்புக்கள் தன்மாத்திரை வழியாக இடம் என்பதும் விளங்கும். இந்திரியம், தன்மாத்திரை, உறுப்பு என்ற இம்மூன்றையும் இணைத்து இனிவரும் செய்யுட்களில் காண்போம்.
ஞானேந்திரியங்கள் அறியும் முறை
12. வான்இடமா நின்று செவி மன்னும் ஒலியதனை
ஈனமிகும் தோல்கால் இடமாக ஊனப்
பரிசம் தனை யறியும் பார்வையின்கண் அங்கி
விரவி உரு வங்காணு மே.
பதவுரை
செவி செவி என்னும் இந்திரியம்
வான் இடமா நின்று (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
ஒலியதனை ஓசையாகிய புலனை
மன்னும் அறிந்து வரும்
ஈனமிகும் இழிவு மிகுந்த
தோல் தோல் என்னும் இந்திரியம்
கால் இடமாக (உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
ஊனப் பரிசம் தனை குற்றமுள்ள ஊறு என்னும் புலனை
அறியும் அறிந்து வரும்
பார்வை கண் என்னும் இந்திரியம்
அங்கியின் கண் விரவி (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்) உருவ தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
உருவம் உருவமாகிய புலனை
காணும் அறிந்து வரும்
பொழிப்புரை
செவி என்னும் இந்திரியம் (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று ஓசையாகிய புலனை அறியும். தோல் என்னும் இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று ஊறு என்ற புலனை அறியும். கண் என்னும் இந்திரியம் (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று உருவம் என்ற விடயத்தை அறியும்.
விளக்கம்
ஆசிரியர் வான் இடமாய் எனவும் கால் இடமாக எனவும், அங்கி விரவி எனவும், பூதங்களை இந்திரியங்களுக்கு இடம் என்று கூறியுள்ளார். நாம் முன்பு கூறியவாறு தன்மாத்திரைகளே இந்திரியங்களுக்கு இடமாக இருக்கவும், பூதங்களை இடம் என்று ஆசிரியர் கூறியது ஏன்? இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். தன்மாத்திரைகளும் பூதங்களும் முறையே முளையும் மரமும் போல சூக்குமமும் தூலமுமாய் நிற்பவை, பூதங்களின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளோடு பூதங்களுக்கு உள்ள இவ் ஒற்றுமையைக் கருதி ஆசிரியர் தன்மாத்திரைகளுக்குப் பதில் பூதங்களை இடம் என்று கூறினார் எனலாம். மேலும், தெரிந்த பருப் பொருளாகிய பூதங்களைக் கூறித் தன்மாத்திரைகளைப் பெற வைத்தார் என்பதும் ஆசிரியரது இயல்புக்குப் பொருந்துவதேயாகும்.
ஆகவே செய்யுளில் வான் என்பது சத்த தன் மாத்திரயையைக் குறிக்கும். அங்கி என்பது உருவ தன்மாத்திரையைக் குறிக்கும்.
செவி, தோல், கண் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும். காது, தோல், கண் ஆகிய உறுப்புக்களில் நிற்கும் சத்தம், பரிசம், உருவம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.
ஞானேந்திரியங்கள் அறியும் முறை(தொடர்ச்சி)
13. நன்றாக நீர்இடமா நாஇரதம் தான்அறியும்
பொன்றா மணம் மூக்கு பூஇடமா நின்று அறியும்
என்று ஓதும் அன்றே இறைஆ கமம் இதனை
வென்றார் சென்றார் இன்ப வீடு.
பதவுரை
நா நாக்கு என்னும் இந்திரியம்
நீர் இடமா (உறுப்பாகிய நாவில் நிற்கும்) இரத தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
இரதம் சுவையாகிய புலனை
நன்றாக நல்ல முறையில்
அறியும் அறிந்து வரும்
மூக்கு மூக்கு என்னும் இந்திரியம்
பூ இடமா நின்று (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று
பொன்றா மணம் கெடாத மணம் ஆகிய புலனை
அறியும் அறிந்து வரும்
என்று இவ்வாறு
இறை ஆகமம் சிவாகமங்கள்
ஓதும் கூறும்
இதனை இவ்விந்திரியங்களை
வென்றார் உலக விடயங்களில் செல்லாதபடி அடக்கிய ஞானிகளே
இன்ப வீடு பேரின்ப வீட்டினை
சென்றார் அடைந்தவராவார்.
பொழிப்புரை
நாக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று சுவையாகிய புலனை நன்றாக அறியும் மூக்க என்னும் இந்திரியம் (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும். இவ்வாறு சிவாகமங்கள் கூறும். இவ் இந்திரியங்களைப் புலன்களில் செல்லாதபடி அடக்கிய ஞான வீரவே பேரின்ப முத்தியைப் பெறுவார்கள்.
விளக்கம்
முந்திய செய்யுளிற் போலவே இங்கும் பூதங்களாகிய நீர் பூ(நிலம்) என்பன தன்மாத்திரைகளைக் குறிப்பன எனக் கொள்ளல் வேண்டும். நாக்கு, மூக்கு ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் நாக்கு, மூக்கு ஆகிய உறுப்புக்களில் நிற்கும் இரதம். கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.
வென்றார் சென்றார் இன்ப வீடு
ஞானேந்திரியங்கள் ஐந்தும் தத்தம் புலன்களை அறியும் முறையினை மேற்போந்த இரண்டு செய்யுட்களில் வகுத்துக் காட்டிய ஆசிரியர் அவ்விந்திரியங்களை வென்றார் எய்தும் பயனையும் உடன் சேர்த்துக் கூறினார்.
இந்திரியங்களை வெல்லுதல் என்றால் அவற்றைக் கெடுத்தல் என்பது பொருளன்று. சமணரும் சாக்கியரும் புலன்களைக் கவர்கின்ற ஐம்பொறிகளையும் அழிப்பதே அவற்றை வெல்லுதல் என்பர். சைவ சமயத்திற்கு அஃது உடன்பாடன்று ஐம்பொறிகளைக் கெடுத்தொழித்தால் உயிர் யாதொன்றையும் அறிய மாட்டாது அறிவற்ற சடம் போல ஆகிவிடும். ஆதலால் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே அவற்றால் கவரப்படும் புலன்களில் பற்றின்றி இருத்தலே அவற்றை வெல்லுதலாகும். ஐம்பொறிகள் நம்மைக் கெடுக்கவில்லை. ஐம்பொறிகளின் வழி ஐம்புலன்களின் மேற் செல்லுகின்ற ஆசையே நம்மைக் கெடுக்கின்றது. அவ் ஆசையை ஆரா இயற்கை அவா என்றார் திருவள்ளுவர். ஆராமையாவது நிரம்பாமை. ஐம்புலன்களுக்குச் சார்பாயுள்ள பொருள்களை எவ்வளது தான் பெற்றாலும், எத்தனை காலம்அனுபவித்தாலும் அவற்றின் மீதுள்ள ஆசை நிரம்புவதேயில்லை. அது பற்றியே ஆரா இயற்கை எனப்பட்டது.
உலகம் நிலையற்றது என்பதைக் கூறும் நூல்களைப் பல கால் படித்திருக்கிறோம். அவற்றின் பொருளைப் பலர் விளக்கிப் பேசியதையும் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உலகம் கானல் நீர் போன்றது என்பதைக் கல்வியினாலும் கேள்வியினாலும் உணர்ந்தாலும் அவையெல்லாம் இந்திரியங்களை அடக்குவதற்குத் துணை செய்யா. நிலையாமையை எவ்வளவுதான் உணர்ந்திருந்தாலும். நம் மனம் நிலையில்லாத ஐம்புலப் பொருள்களின் மேல் அவாக் கொண்டு அவற்றை நோக்கியே முடிவின்றி ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற மனத்தை அடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர் வழியாகும். ஓடுகின்ற மனத்தை அடக்குமாறு எவ்வாறு? மதங் கொண்டு செல்கின்ற யானையை ஒரு தறியில் கட்டிவிடுதல் போல, ஐம்புலப் பொருள்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச் செலவினின்றும் மீட்டு, சிவபெருமானது உருவத் திருமேனியிலே படிந்து நிற்குமாறு சிவ வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். இறைவனை உள்ளன்போடு வழிபாடு செய்து வரின் ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். இந்திரியங்களும் பிற வழியிற் செல்லாது.
கண்காள் காண்மின்களோ கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
செவிகாள் கேண்மின்களோ சிவன்
எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண் மின்களோ
வாயே வாழ்த்து கண்டாய் மத
யானை யுரிபோர்த்துப்
பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்
என்று அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லும், எனவே, இந்திரிய அடக்கம் என்பது உண்மையில் மன அடக்கமேயாகும். மேற்கூறிய வகையில் இந்திரியங்களையும், மனத்தையும் அடக்கி அவற்றை ஞானநெறியில் செலுத்தியவர் பேரின்ப வீட்டைத் தலைப்படுவர் என்பது இச் செய்யுளில் கூறப்பட்டது.
ஞானேந்திரியங்கள் அறியும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்திக் காட்டலாம்.
இந்திரியம் சார்பு/பற்றுக்கோடு உறுப்பாகிய இடம் அறியப்படும் புலன்
செவி சத்த தன்மாத்திரை காது ஓசை
தோல் பரிச தன்மாத்திரை தோல் ஊறு
கண் உருவ தன்மாத்திரை கண் ஒளி
நாக்கு இரத தன்மாத்திரை நாக்கு சுவை
மூக்கு கந்த தன்மாத்திரை மூக்கு மணம்