பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
ராமேஸ்வரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, ராமேஸ்வரம் கோவிலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூட்டி கிடந்த, ராமாயண வரலாற்று சிற்ப காட்சி கூடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரத்தில், ராமாயண வரலாற்றை பக்தர்கள் அறியும் வகையில், ராமர், சீதை ராமலிங்க (சிவலிங்கம்) பிரதிஷ்டை செய்து, பூஜை செய்வது போலவும், அவர்களை லட்சுமணர், அனுமன், நாரதர், வானர சேனைகள் படை சூழ வணங்கி நிற்பது போலவும், சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட காட்சி கூடம் இருந்தது. இக்கூடத்தை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கோவில் நிர்வாகம் பூட்டி வைத்ததால், சிற்பத்தை காண முடியாமல், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து, "தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்து அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுப்படி, பூட்டி கிடந்த சிற்ப காட்சி கூடத்தை, நேற்று, கோவில் ஊழியர்கள் திறந்து, சிற்பம், சுவரில் படிந்து இருந்த தூசிகளை அகற்றி, 1.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.