பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
தேனி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கிணற்றுக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படவில்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல், ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த சிவலிங்கத்திற்கு, வரும் திருக்கார்த்திகை தினத்தில் முதன்முறையாக ஜோதி வழிபாடு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், கி.பி.,1416 ல், கட்டப்பட்ட பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் நடந்தபோது, கோயில் கிணற்றுக்குள், கல்வெட்டுடன் கூடிய சிவலிங்கம் கண்டு எடுக்கப்பட்டது. இதில், மூக்கன்சித்தர் அபிஷேகம் செய்வது போல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சிவலிங்கம் நீருக்குள் இருப்பது தான் சிறப்பு என்பதை உணர்ந்த கோயில் நிர்வாகிகள், கிணற்றுக்குள்ளேயே சிவலிங்கத்தை வைத்து, மேலே பீடம் கட்டி, பூட்டு போட்டனர். இந்த விஷயம், நூறு ஆண்டுகளுக்கு மேல், சிதம்பர ரகசியம் போல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆண்டிபட்டி மக்களுக்கே, இது பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த கோயில் கிணற்றில் சிவலிங்கம் உள்ள இடத்தில், ஜோதி மண்டபம் கட்டப்பட்டு, பெண்கள் விளக்கு ஏற்றி வருகின்றனர். முதன் முறையாக வரும் திருக்கார்த்திகை தினத்தில், இந்த சிவலிங்கத்திற்கு கார்த்திகை தீபம் ஏற்றி, ஜோதி வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள கார்த்திகை மண்டபத்தில், சுழலும் லிங்கம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும், லிங்கம் அவர்கள் பக்கம் திரும்பி நிற்பது போல், காட்சி தருவது தான், இந்த ஓவியத்தின் சிறப்பு.
திருப்பணிக்குழு உறுப்பினர் சுப்புராமன் கூறியதாவது: இங்கு கார்த்திகை தீபம் ஏற்றி, வழிபாடு நடத்திய பின், அந்த தீபம், திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்படும், என வரலாறு கூறுகிறது. இந்தாண்டு, வரும் திருக்கார்த்திகை தினத்தில், ஜோதி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார். திருப்பணிக்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகையில், ""இதுவரை இந்த கிணற்று லிங்கத்தை பக்தர்களோ, பொதுமக்களோ பார்த்தது இல்லை. எனவே பாதுகாப்பு கருதி பூட்டு போட்டுள்ளோம். டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், இங்கு வந்து முக்கிய விசேஷ நாட்களில் வழிபாடு நடத்துவர். அப்போதும் கதவு திறக்கப்பட்டதில்லை. வரும் கார்த்திகையின் போது, கதவை திறந்து ஜோதி ஏற்ற முடிவு செய்துள்ளோம், என்றார்.