பதிவு செய்த நாள்
14
நவ
2013
10:11
தஞ்சாவூர்: கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவிலில் வரும், 17ம் தேதி நடக்கும் விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் சுப்பையன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுவாமிமலை சுவாமி நாதஸ்வாமி கோவிலில் திருக்கார்த்திகை பெருந்திருவிழா வரும், 17ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, விழா முன்னேற்பாடு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்காவிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவிலில், வரும், 17ம் தேதி, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பெருந்திருவிழா நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்துத்துறை அலுவலர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். மின்தடை நேரத்தில் மின்சப்ளை சீராக இருக்க ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும். கோவில் வளாகத்துக்குள் தகர பந்தல் அமைக்கவும் அன்னதானம் வழங்கவும் முன்கூட்டியே போதிய இடம் தேர்வு செய்ய வேண்டும். பக்தர்கள் கோவிலுக்குள் சிரமமின்றி, நுழைந்து வெளியேற தனித்தனி வழித்தடம் அமைக்க வேண்டும். போதிய பாதுகாப்பு வசதியை போலீஸார் மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் பாதுகாப்பு வேலி போட்டும், தடுப்பு அரண்கள் அமைத்தும், கண்காணிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, சாலை வசதி மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அவசியமான நேரங்களில் பயன்படுத்த அவசர சிகிச்சை ஊர்தி, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், தஞ்சை டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், கும்பகோணம் ஆர்.டி.ஓ., கோவிந்தராவ், கலெக்டரின் பி.ஏ., (பொது) சங்கரநாராயணன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி, இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் வசந்தா, கோவில் அறநிலையத்துறை துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் மாரியப்பன், குடந்தை தாசில்தார் மாதவன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.