பதிவு செய்த நாள்
02
டிச
2013
02:12
ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோயில் செல்லும் ஏழை பக்தர்கூட தன்னிலும் கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். தன்னோடு வரும் பக்தர்களுக்கு உதவலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டுஏந்தி புறப்படுவதற்கு முன்பு கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11ம் தேதிக்குள்ளாக ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். பொதுவாக கன்னி ஐயப்பன் வீட்டில் வைத்துதான் ஆழிபூஜை அல்லது வெள்ளம்குடி நடத்துவார்கள்.
வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழ கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும், கணபதி, மாளிகைப்புறத்தம்மன், மலைநடை, உடும்பாறைமலை, கருப்பசாமி, கடுத்தைசுவாமி, தலைப்பாதைமலை, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து, அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தின் முன்னால் ஒரு வாள் வைப்பது மிகவும் சிறந்தது.
கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழிவளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலா விறகுகளை ஆழியில் போட வேண்டும். ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன்மார்களும் ஆழியை வலம்வந்து சரணகோஷம் எழுப்ப வேண்டும். பூஜை முடிந்தபிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜையை நடத்தலாம். செலவு குறையும்.