பதிவு செய்த நாள்
16
ஜன
2014
02:01
நம்பர் ஒன் கோவில்: முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் பழநி மூன்றாவது தலம். பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் அதிக வருமானமுள்ள கோயில் இதுவே. தங்கத் தேர், தங்க மயில் வாகனம் உள்ளது. தங்கத்தேர் இழுத்தல் மூலம் ஏராளமான வருமானம் வருகிறது.
பழநியில் அன்னாபிஷேகம்: பழநி மலைக்கோயில் முருகனுக்கு, ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகாலத்தில் (மதியம்) அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை (மாலை) பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. அடுத்த நாளான பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.
தொழில் பாட்னர்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலில் பங்குதாரராக பழநிமுருகனைச் சேர்த்துக் கொள்வர். தொழில் தொடங்கும் போதே தண்டாயுதபாணியின் பெயரிலும் முதல் போட்டு விடுவர். அந்த பங்குத்தொகைக்கு கிடைக்கும் லாபத்தை தைப்பூசம், பங்குனிஉத்திர விழாக்காலங்களில் உண்டியலில் சேர்த்துவிடுவர். முருகனைப் பார்ட்னராக ஏற்றுக் கொண்டால் லாபம் அமோகமாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
பழநியாண்டவர் வடிவத்தத்துவம்: தந்தை வைத்த போட்டியில் கனி கிடைக்காததால் கோபித்த முருகன் மயில் மீதேறி பழநி வந்தார். மகனைச் சமாதானப்படுத்திய தாய், மீண்டும் கயிலைக்கு அழைத்தாள். ஆனால், முருகன் பழநியிலேயே இருக்க விரும்பினார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. குழந்தை வடிவமாக நின்றதால், குழந்தை வேலாயுதர் என்று பெயர் பெற்றார். பழத்திற்காக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், பழம் நீ (நீயே ஞானப்பழம்) என்று ஆறுதல் வார்த்தை சொன்னார். இப்பெயரே பழநி என மருவியது. கனிந்த பழம் எப்படி உதிர்ந்து விடுமோ, அதுபோல சொந்த பந்தங்களையும், உலகப்பொருட்கள் தரும் இன்பத்தையும் விட்டு விலகினால் ஞானம் கைகூடும். அதனால் தான் முருகப்பெருமான் பெற்றோர், சகோதரர் மீதுள்ள பந்தத்தை அறுத்தார். உடுத்தும் உடை மீது கூட பற்றை அறுத்து, கோவணத்துடன் பழநியில் நின்றார். பந்தத்தையும், பற்றையும் துறந்தவர்களே தன்னை அடைய முடியும் என இக்கோலம் மூலம் உணர்த்துகிறார்.
ஆண்டிக்கோல மகத்துவம்: பழநியில் முருகன் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் உள்ளார். திருஆவினன்குடியில் குழந்தையாக காட்சி தருகிறார், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் வீற்றிருக்கிறார். இல்லறம், துற வறம் ஆகிய இருநெறிகளையும் முருகன் இங்கு காட்டி நின்றாலும் மலைக்கோயில் பழநியாண்டிக்கே சிறப்பு அதிகம். தண்டாயுதம் ஏந்தி கோவணத்துடன் ஞானபண்டித சுவாமியாக எழுந்தருளியுள்ள இவரை தரிசித்தால் அறியாமை அகலும்.
மூலிகை முருகன்: பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவபாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. சுவாமி மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீக தீர்த்தமும் மருத்துவ குணம் கொண்டவை. இவர் கையில் உள்ள தண்டம் சக்திமிக்கதாக போற்றப்படுகிறது.
தமிழ்க்கடவுள் சேர,சோழ,பாண்டியர்களுக்கு குலதெய்வம் பழநிமுருகன். மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்ற பழமொழிக்கேற்ப, தமிழ் மக்களுக்கும் அவரே குலதெய்வமாகி தமிழ்க்கடவுள் என புகழ் பெற்றார். மூவேந்தரில் கேரளப்பகுதியை ஆண்ட சேரர்களே மூத்தவாரிசாக இருந்தனர். அதனால், பழநி முருகன் சேரநாட்டைப் (கேரளம்) பார்த்தபடி மேற்குநோக்கி காட்சி தருகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன், சேரமான் பெருமானால் இக்கோயில் கட்டப்பட்டது. திருமலைநாயக்கர் காலத்தில் திருப்பணி நடத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.