பதிவு செய்த நாள்
16
ஜன
2014
02:01
மலர் போல் மலரட்டும்: முருகன் சிவந்தமேனியுடன், கையில் வேல் தாங்கியிருப்பார். வலதுபக்கம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் காட்சியளிப்பர். சூரியன் முருகனின் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. சூரியனைக் கண்டு தாமரை மலரும். சந்திரனைக் கண்டு நீலோத்பலம் என்னும் குமுதமலர் மலரும். அதனால், சித்திரம் தீட்டும்போது வலப்புறம் இருக்கும் வள்ளிக்கு தாமரையும், இடப்புறம் இருக்கும் தெய்வானைக்கு குமுத மலரும் வரைய வேண்டும். முருகனின் பார்வையால் இம்மலர்கள் மலர்வதைப் போல பக்தர்களின் வாழ்வும், எப்போதும் மலர்ந்திருக்கும்.
முருகா என்றழைக்கவா: தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு. முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார். முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும் இனிமையான வாழ்வு அமையும்.
குழந்தைகளுக்கான ஆயுதம்: தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இடும் வழக்கம் இல்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால், முருகனின் வெற்றி வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர் வேல், தங்கவேல், சக்திவேல்,வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என்று பெயரிடுகிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும் போது, திருக்கைவேல் போற்றி போற்றி! என்று ஒருமுறைக்கு இருமுறை போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.
மகாபாரதத்தில் கந்தன்: வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி, அக்னி, கங்கை, கார்த்திகைப்பெண்கள், இந்திராதிதேவர்கள் ஆகியோருக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை அதில் விளக்குகிறார். மகாபாரத வனபர்வத்தின் கடைசி அத்தியாயத்தில் கந்தனின் திருநாமங்கள், துதிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கந்தனின் பெருமைகளைக் குறிப்பிடும் பத்து அத்தியாயங்கள் அதில் உள்ளன. மூவுலகத்திலும் புகழ் பெற்ற கந்தனுக்கு இந்திரன், தன் பதவியை வழங்கினான். ஆனால், கந்தன் பெருந்தன்மையோடு இந்திர பதவியை ஏற்கவில்லை. தேவர்களின் சேனாதிபதியாக பதவியேற்றதால், கந்தனுக்கு தேவசேனாபதி என்ற பெயர் ஏற்பட்டது.
வெற்றி நகரில் தைப்பூசம்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள். தைப்பூசத்தன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.
திருச்செந்தூர் செல்கிறீர்களா?
திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும்பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது. முருகப் பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற அபூர்வ தீர்த்தம் கிடையாது.
வள்ளி கல்யாணம் நடந்த பூசம்: வள்ளி கல்யாணம் கோயில் திருவிழாவில் நாடகமாக நடக்கும். இதற்கு சிறப்பான தத்துவம் உண்டு. வள்ளி என்பது ஜீவாத்மா என்னும் உயிர். முருகனை அடைய விடாமல், அவளது உறவினர்கள் தடுத்தனர். ஆனால், தோழிகள் முருகனிடம் வள்ளியைச் சேர்த்தனர். அதுபோல, நம்முடைய தீவினைகளாகிய உறவினர்கள், நம்மைக் கடவுளை அடைய விடாமல் தடுக்கின்றன. தோழிகளாகிய நல்வினைகள் நம்மை கடவுளிடம் சேர்க்கின்றன. நற்செயல்களின் உதவியால் மட்டுமே, நாம் முருகனை அடைய முடியும் என்பதே வள்ளி கல்யாணம் காட்டும் உண்மை. முருகன் வள்ளியைத் திருமணம் செய்ததும் பூச நட்சத்திரத்தில் தான். திருத்தணியில் மாசி பூசத்தன்று வள்ளி திருமணம் நடக்கும்.
வேல் பெற்ற நன்னாள்: சூரபத்மனை வதம் செய்வதற்காக, முருகப்பெருமான் அன்னை பார்வதியின் அருளை நாடினார். தன் ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டிய பார்வதி, அதை வேலாயுதமாக மாற்றினாள். வேலை முருகனுக்கு அளித்து, வெற்றி உனதே என்று வாழ்த்தினாள். இதனால், வேல் முருகனின் அடையாளமானது. அன்னையிடம் வேல் பெற்ற நன்னாளே தைப்பூசம் என்பர். பக்தர்கள் பால், பன்னீர் போன்ற திரவியங்களைக் காவடியில் தாங்கி வந்து முருகனுக்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுகின்றனர்.
ஐந்தாவது படை வீடு: ஆறுபடைவீடுகளை வரிசைப்படுத்தும்போது ஐந்தாம்படை வீடாக திருத்தணியைக் குறிப்பிடுவர். இதைக் குன்றுதோறாடல் என்று சொல்வதும் உண்டு. இதற்கு குன்று தோறும் குடியிருப்பவன் என்று பொருள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற சொல் வழக்கு இதை உறுதிப்படுத்துகிறது. ஆறுபடை வீடு மட்டுமில்லாமல் மலைக்கோயிலான எல்லா முருகன் கோயில்களுமே குன்றுதோறாடலில் அடங்கும்.
முருகனுக்கு ஆடு வாகனம்: முருகனின் வாகனம் மயில். ஆனால், முருகனுக்குரிய மந்திர நூலான கந்தரனுபூதியில் முருகனின் வாகனம் ஆடும் பரி என அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஆடும் என்பது நடனத்தைக் குறிக்கும். பரி என்றால் குதிரை. குதிரையோ நடனமாடுவதில்லை. அதனால், மயிலையே ஆடும் பரி என அருணகிரியார் குறிப்பிடுகிறார். வேறொரு பாடலில் மயிலை துரகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதற்கும் குதிரை என்றே பொருள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில், மருங்கூர் கோயில்களில் உள்ள முருகன் திருவிழாக் காலங்களில் குதிரையில் பவனி வருவது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முத்துக்குமாரர் கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில்களில் முருகப்பெருமான் ஆடு, வாகனத்தில் பவனி வருகிறார். சில கோயில்களில் யானை வாகனம் உண்டு.