பதிவு செய்த நாள்
20
ஜன
2014
05:01
* உலகம் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, சேவையில் ஈடுபடக் கூடாது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவை செய்ய வேண்டும்.
* உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. வெறுப்பு கொண்டவனுக்கு உலகில் எந்த இன்பமும் கிடைக்கப் போவதில்லை.
* மண்ணில் தோன்றிய பெரியோர்களுக்கும், அவர்கள் போதித்த அறிவுரைக்கும் அளவே கிடையாது. ஆனால், நாகரிக உலகில் மனிதன் அவற்றை புறக்கணிக்கிறான்.
* நாம் அனைவரும் சகோதரர் என்ற நல்லுணர்வை மனிதசமூகம் பெற்றுவிட்டால், காவல் நிலையம், நீதிமன்றம், அரசாட்சி போன்ற அமைப்புகள் தேவைப்படாது.
* மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. ஆறாவது அறிவான பகுத்தறிவே, மற்ற உயிர்களில் இருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது.
* யார் வேண்டுமானாலும் பொருளைத் தேடி விடலாம். ஆனால், அருட்செல்வத்தை அனைவராலும் தேட முடியாது.
* வாழ்வில் ஆண் ஒரு பாதி என்றால், பெண் மறுபாதியாக இருக்கிறாள். இரண்டும் சேர்ந்தால் தான் முழுமைத் தன்மை பெற முடியும்.
* எல்லா உயிர்களையும் தன்னைப் போல கருதி அன்பு காட்டி வாழ்வதே, இல்லற வாழ்வின் அடிப்படை பண்பு.
* அன்பு வாழும் உள்ளமே தெய்வம் வாழ்வதாகும். அதுவே நிறைவானதும், இன்பமானதும் ஆகும். அன்புச் செல்வத்தின் முன் மற்ற செல்வங்கள் தோற்றுவிடும்.
* இந்த மனித உடல், அழகு தெய்வம் வாழும் இயற்கைக் கோயில். அதைப் பாதுகாப்பது நம் கடமை.
* ஒழுக்கம் உயிரை விடமேலானது. அதுவே மனிதனுக்கு சிறப்பு அனைத்தும் தருகிறது. நல்லொழுக்கம் கொண்டவனின் அழகு அனைவரின் மனதையும் கவர்ந்து விடும்.
* ஒரு மனிதனையும், அவன் சார்ந்த சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவது ஒழுக்கமே.
*வாழ்வில் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது உண்மையானால், தற்கால மேல்நாட்டு நாகரிக மோகத்தை விட்டு விடுவது அவசியம்.
* கல்வியின் உண்மையான பயன் ஒழுக்கநெறியில் நடப்பது தான். ஒழுக்கமில்லாத கல்வியால் யாருக்கும் பயன் உண்டாகாது.
* ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நம்மைக் கரைசேர்க்கும் பலம் ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு. எக்காரணம் கொண்டும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதீர்கள்.
* அடிக்கடி கவலைப்படுவது கொடிய வியாதி. அது உடல்நலனைக் கெடுத்து விடும்.
* பிறப்பால் உயர்வு, தாழ்வுகருதுவது கூடாது. ஒழுக்கமே மனிதனின் உயர்வு, தாழ்வுக்கு காரணம்.
* அச்சமுள்ள இடத்தில் வீரம் இருப்பதில்லை. அச்சம் அற்றவனே உண்மையான வீரன்.
* அன்பு, இரக்கம், கருணை, ஈகை போன்ற மேலான குணங்கள் இல்லாவிட்டால், உலகத்தில் பாவச்சுமை பெருகி விடும்.