பதிவு செய்த நாள்
17
பிப்
2014
10:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்ப உற்சவத்தில், புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் சுவாமி அருள்பாலித்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினம் ஆழத்து விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், தயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. 11ம் தேதி விபச்சித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 14ம் தேதி பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா, 15ம் தேதி மாசி மக உற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 16ம் தேதி தெப்ப உற்சவத்தையொட்டி, இரவு 11:00 மணியளவில் நூற்றுக்கால் மண்டபத்தில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு மகா தீபாராதனை, வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இன்று அதிகாலை 3:00 மணிக்கு அம்மன் திருக்குளத்தில் புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் சுவாமி தெப்ப உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.