விண்ணையும் மண்ணையும் படைத்த இறைவன், மக்களின் பாவங்களை ஏற்று சிலுவையில் தொங்கும் நிலையை புனிதவெள்ளியன்று நாம் காண்கிறோம். சிலுவை என்பது யூதர்கள் மத்தியில் அவமானச் சின்னமாக விளங்கியது. பெரிய தவறு செய்தவர்களை சிலுவையில் அறைந்து தண்டனை கொடுப்பர். இறைமகனாகிய இயேசுவுக்கும் அதே நிலை ஏற்பட்டது. ஏன் இந்த நிலை? அவர் ஏதேனும் குற்றம் செய்தாரா என்றால் இல்லை.... அப்படியானால், குற்றவாளிகள் யார்?
நாம் தான்... நாம் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாகத் தான், அவரை நாமே சிலுவையில் அறைந்தோம். அறைந்து கொண்டும் இருக்கிறோம். இறைமகன் இயேசு சிலுவையில் தொங்கியதால் அந்த சிலுவைக்கே மகிமை கிடைத்து விட்டது. ஆனால், இன்று வீடுகளிலும், நிறுவனங்களிலும் அவர் பாடுபட்ட சுரூபத்தை வைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவருக்கு ஏற்பட்ட துன்பம் நமக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணமாக இருக்கிறது. சிலுவை என்பது தூய்மையின் சின்னம். இது நம் வீடுகளில் இருந்தால் தான் பாவம் செய்ய வேண்டுமென்ற எண்ணம், நம்மை விட்டு அடியோடு நீங்கும். இயேசுவின் தூய உடல் ஆணிகளால் அறையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் காயங்களால் நாம் குணமடைந்தோம். (ஏசாயா 53:5) இறையரசின் மதிப்பீடுகளுக்காக இயேசுவின் உடல் அறையப்பட்டு, மகிமை அடைந்த வீர வரலாற்றை நினைவுபடுத்துவதே புனிதவெள்ளி நாள். அருளானந்தர், தோமையார் போன்ற மறைசாட்சியர்கள் நம் நாட்டு வரலாற்றில் இடம் பெறுகின்றனர். ""என் பொருட்டு தன்னையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர் (மத்தேயு 16:25) என்றார் இயேசு கிறிஸ்து. இயேசுவின் இறப்பே நம் வாழ்வு. மறைசாட்சியரின் ரத்தம் நம் விசுவாசத்தின் வித்து. புனித வெள்ளி பாடுகளின் பாதைகளை தியானிக்க வேண்டிய நாள். மாட்சிமை என்பது பாடுகளுக்குப் பின் வருவது அல்ல. அது பாடுகளின் வழியாக வருவது என்பதை இயேசு கிறிஸ்து மெய்ப்பித்துக் காட்டினார். நாமும் அவரது பாடுகளில் பங்கெடுப்போம்.