பதிவு செய்த நாள்
26
மே
2014
11:05
செஞ்சி : பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் குடைவரை கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கருட கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அங்குரார்பணமும், ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் கொடிமரத்தினருகே எழுந்தருளினர். சிறப்பு பூஜையுடன் 8.30 மணிக்கு கருட கொடியேற்றம் நடந்தது.சூர்ய பிரபையில் சாமி ஊர்வலம் நடந்தது. நாளை சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும், நான்காம் நாள் சேஷவாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனும் கருட சேவை, வரும் 29ம் தேதி காலையில் நடக்கிறது. தொடர்ந்து 30ம் தேதி யானை வாகனத்தில் சாமி ஊர்வலமும், 31ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நேற்று நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர்திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, உபயதாரர்கள் திருஞானசம்மந்தம், வழக்கறிஞர் அண்ணாமலை, ஸ்ரீராம் ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை விஜயகுமார் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.