பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
10:07
காரைக்கால்: காரைக்காலில், மாங்கனி திருவிழாவின் முதல் நாளான நேற்று, மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், காரைக்காலில் உள்ள அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் ’மாங்கனி திருவிழா’ நடத்தப்படுகிறது. இத்திருவிழா, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இன்று (11ம் தேதி) காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனித நீராடுதல், 9.00 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுதல், 10.30 மணிக்கு, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு, இரவு முத்து பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை 8.00 மணிக்கு சிவபெருமான் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதி உலா வருவார். அச்சமயம், பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசி பரவசமடைவர். மாங்கனி விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.