நாமக்கல்,நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.இருப்பினும் தமிழ்மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நிர்வாகம் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.