கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் குளத்தங்கரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் குறத்தியாயி அம்மன் ஊர்வலம், நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு சக்திமார்கள் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை செல்லியம்மன் நதிக்கரையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு சக்தி கரகம், பூங்கரகம், அக்னி கரகம், பால்குடம் சுமந்து பக்தர்கள் தேரோடும் வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பெரியநாயகி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. பகல் 2 மணிக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு 7 மணிக்கு பெரியாயி அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.