தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் குழந்தையாக வந்திருக்கும் சுபவேளையை வசுதேவர் கொண்டாட விரும்பினார். கம்சனால் சிறை வைக்கப்பட்டிருந்த அவர், செயல் அளவில் தர்மம் செய்ய இயலவில்லை. அதனால், மானசீகமாக பல்லாயிரம் பசுக்களை அந்தணர்களுக்கு தானம் அளித்தது போல் பாவனை செய்தார். பின் தன் மனைவி தேவகியுடன் இணைந்து பரம் பொருளே! கம்சனின் கொடுமையில் இருந்து எங்களைக் காக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டனர். இவர்கள் இருவரும் முற்பிறவியில் ஸுதபா, பிருச்னி என்ற பெயரில் வாழ்ந்தனர். அவர்கள் விஷ்ணுவை நினைத்து 12,000 ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, விஷ்ணுவே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என வரம் பெற்றனர். அதன்படியே கிருஷ்ணன் என்னும் பெயரில் விஷ்ணு, அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தார்.