பதிவு செய்த நாள்
20
ஆக
2014
12:08
ஆத்தூர்: சேலம் மாவட்ட கையேட்டை தயாரித்த, ‘லெபான்’ என்ற ஆங்கிலேயர், ஆறு + ஊர் ஆற்றூராகி பின், வழக்கில் ‘ஆத்தூர்’ என, அழைக்கப்பட்டது என்கிறார். பழங்காலத்தில், ‘அனந்தகிரி’ என்ற பெயரும் இருந்ததாகவும், கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனந்தகிரி என்றால், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் (கிரி என்றால் மலை), என பொருள் உண்டு. கலியுகத்தில், தீர்த்தகிரி என்பவரது வம்சம் ஆத்தூரை ஆண்டபோது, அந்த வம்சத்தை சேர்ந்த அனந்தகிரி என்பவர், கோட்டை, கோவில், அரண்மனை கட்டியதால், அனந்தகிரி மன்னன் பெயரில் இவ்வூர் அழைக்கப்பட்டது. ஆத்தூர், அனந்தகிரி என, இரு பெயர்களில் அழைக்கப்பட்டதாக, ‘ரிச்சர்ட்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திரேதாயுகத்தில் தண்டகாருண்யம் என வழங்கப்பட்ட ஆத்தூரில், வசிஷ்டரும், அவரது சீடர்களும் தவம் செய்தனர். அதனால், வடக்கு கல்வராயன் மலையில் உற்பத்தியாகி, ஆத்தூர், தலைவாசல் வழியாக சென்ற மேல்வெள்ளாறு என்பதை, வசிஷ்ட முனிவர் வருகைக்கு பின், வசிஷ்ட நதி என, அழைக்கப்பட்டது. வசிஷ்ட நதி கரையில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் (நிலம்), ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் (நீர்), ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் (நெருப்பு), ஆறகளூர் காமநாதீஸ்வரர் (காற்று), கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் (ஆகாயம்) என, பஞ்ச பூத ஸ்தலங்களும், பெருமாள் கோவில்களையும் பிரதிஷ்டை செய்தார். வசிஷ்ட நதி பகுதியில், ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களுடன், 21 சிவன் கோவில்களும், பெருமாள், விநாயகர், அம்மன் கோவில்கள், பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கோவில்களாக உள்ளன. அதன்படி, ஆத்தூர் வசிஷ்ட நதி வட கரையில், கைலாசநாதர் கோவில் அருகில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சுயம்பாக உருவான பெரிய மாரியம்மன் குழந்தை வடிவத்திலும், செல்லியம்மன் கோவிலில், சப்த கன்னிகள் வழிபாடு செய்த இடமாகவும், ஐயனார், கருப்பண்ணார் கோவில்கள் உள்ளன.
கடந்த, 1940ல், ‘ஆத்தூர் நாடு’ என்றழைக்கப்பட்ட பகுதியில், விஷ காய்ச்சல், தோல் வியாதி ஏற்பட்டு பலர் இறந்தனர். நோய் பாதிப்பால், இங்கு வசித்த பலர் வேறு ஊர்களுக்கு சென்றபோது, அருணாச்சல செட்டியார், மனைவி பாவாயி குடும்பத்தினர் மட்டும் வெளியேறாமல் இருந்தனர். அருணாச்சல செட்டியாருக்கு, விஷ காய்ச்சல், தோல் நோய் ஏற்பட்டதால், சிறிய குடிசையில் இருந்த பெரிய மாரியம்மன் ஸ்வாமியை வழிபட்டு விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, 20 வயதுடைய இளம் பெண் ஒருவர், அருணாச்சல செட்டியாரின் உடலை நீவி விட்டபோது, நோய் குணமடைந்தது. அதையறிந்த பொதுமக்கள், இக்கோவிலில் வந்து வழிப்பட்டதும், நோய் பூரண குணமடைந்ததால், கோவில், மதில் சுவர் எழுப்பி வழிபாடு செய்தனர். இன்றளவும் குழந்தை பிறந்ததும், அக்குழந்தையை எடுத்து வந்து அம்மன் முன் வைத்து, துள்ளு மாவு (தூள் மாவு) படைத்து, அன்னதானம் வழங்குகின்றனர். குழந்தை வடிவில் உள்ள பெரியமாரியம்மன் ஸ்வாமி கோவிலில், பூஜை செய்து சக்தி அழைத்து சென்ற பின்னரே, ஆத்தூர் நகரில் உள்ள மற்ற கோவில்களில் விழா நடத்துவது வழக்கம். அம்மை நோய், திருமணத் தடை, குழந்தை பாக்கியம் நிவர்த்தி பெறும் கோவிலாக உள்ளது. கோவில் வளாகத்தில், அரசு, வேம்பு மரத்தின் இடையில் உள்ள நாகர் சிலைக்கு, நாக தோஷம் வழிபாடு செய்தால் நிவர்த்தி பெறுகிறது. ஆத்தூர் செல்லியம்மன் கோவிலில், தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் வழிபாடு செய்து விட்டு, போருக்கு செல்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இங்கு வந்து செல்ல நேரமாவதால், செல்லியம்மன் கோவிலை தஞ்சாவூரில் கட்டி வழிப்பட்டதாகவும், கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், கடந்த, 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி, 20 நாட்கள் விழா நடந்து வருகிறது. இன்று, 20ம் தேதி, பெரிய மாரியம்மன், செல்லியம்மன் ஸ்வாமி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.