பதிவு செய்த நாள்
20
ஆக
2014
12:08
ஆத்தூர்: ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள, செல்லியம்மன் கோவிலில் நேற்று நடந்த விழாவில், எருமை கிடா, ஆடு மற்றும் கோழிகளை வெட்டி, நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆத்தூரில், பழமையான பெரிய மாரியம்மன், செல்லியம்மன், ஐயனார், கருப்பண்ணார் கோவில்கள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட சமுதாயத்தினரின் குல தெய்வமாக, வசிஷ்ட நதி கரையில் உள்ள, பெரிய மாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில், கடந்த, 10 ஆண்டுக்கு மேல் விழா நடத்தாததால், மழை பொய்த்து போனதாகவும், விழா நடத்தினால் மழை வரும் என, அருள் வந்து ஆடிய பெண்கள் கூறினர். இதையடுத்து, ஆடித் தேர்த் திருவிழா நடத்த, அனைத்து சமுதாயத்தினரும் முடிவு செய்தனர். கடந்த, 5ம் தேதி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று, 19ம் தேதி, செல்லியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் பூஜை நடந்தது. அப்போது, இரண்டு எருமை கிடா, 50க்கும் மேற்பட்ட கிடா ஆடு, கோழிகளை வெட்டினர். வெட்டப்பட்ட எருமை கிடா, ஆடுகளுடன், கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில், ஆத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இன்று, 20ம் தேதி, பெரிய மாரியம்மன், செல்லியம்மன் தேர்த் திருவிழாவை, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ், ஆத்தூர் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன் ஆகியோர், தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். விழாவில், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் நகராட்சி சேர்மன் உமாராணி, துணை சேர்மன் மோகன், நரசிங்கபுரம் நகராட்சி சேர்மன் காட்டுராஜா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.