பெ.நா.பாளையம் : வெள்ளமடை தர்மராஜாகோவிலில், உலக நலன் வேண்டி அன்னக்கூட உற்சவம் நடந்தது. இக்கோவிலில் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணருடன் பாண்டவர்கள், திரவுபதி அம்மன் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு நடத்தப்படும், 18 நாள் உற்சவத்தின் இறுதியில் 60 அடி குண்டம் திருவிழா நடப்பதும், 1974ம் ஆண்டு முதல் கோவில் வளாகத்தில் நந்தா தீபம் அணையா விளக்காக எரிந்து வருவது இக்கோவிலின் சிறப்பு. விழாவையொட்டி, உலக நலன் வேண்டியும், மழை பெய்யவும் வலியுறுத்தி, கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை, அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. அரங்கநாத பட்டார்ச்சார்யா தலைமையில் ஒரு மூட்டை அரிசி பிரசாதத்துடன் சுவாமிக்கு அன்னக்கூட உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, விராட பர்வ பாராயணம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.