பதிவு செய்த நாள்
27
ஆக
2014
12:08
மும்பை : மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜி.எஸ்.பி., சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, 259 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, மும்பையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜி.எஸ்.பி., சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, 22 கோடி ரூபாய் மதிப்பில், தங்க, வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டுள்ளன.அந்த விநாயகரை கடலில் கரைக்கும் முன், அதில் உள்ள ஆபரணங்கள் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி பூஜை துவங்கிய நாள் முதல், சிலை கரைப்பு நடைபெறும் நாள் வரை, இந்த விநாயகர் சிலைக்கு, இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவர். இந்த சிலை மற்றும் பக்தர்கள், மண்டபம் போன்ற அனைத்து விதமான பாதுகாப்புக்கும் சேர்த்து, 259 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தீ, வெள்ளம், பயங்கரவாதிகள் தாக்குதல், இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துகளை குறிப்பிட்டு, இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், காப்பீடு செய்துள்ள நிறுவனம், 259 கோடி ரூபாயை, ஜி.எஸ்.பி., சேவா மண்டலுக்கு வழங்கும். மும்பையின் மிக பெரிய விநாயகர் சிலையான, லால்பாக்சா ராஜா சிலைக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 51 கோடி ரூபாய்க்கு அந்த சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்த காப்பீட்டை, பொதுத்துறை காப்பீடு நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது.