பதிவு செய்த நாள்
01
செப்
2014
10:09
அரும்பாக்கம்: அரும்பாக்கத்தில், கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட, விநாயகர் கோவில் உள்ளது. அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலையில், பால கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை, வள்ளியம்மை ஆச்சி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கடந்த, ௧௯௭௧, ஜூன்,12ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியால், கோவில் கட்ட, அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவிலில், பளிங்கு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாகி பழனியப்பன் கூறியதாவது: இந்த கோவில் எனது தாத்தா, பழனியப்ப செட்டியார், அறக்கட்டளை நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் கட்டப்பட்டது. அனேகமாக, அவர், கருணாநிதியின் நட்பு வட்டத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால், நாத்திகரான கருணாநிதி, கோவில் கட்ட அடிக்கல் நாட்ட வந்திருக்க வேண்டும். அவர், கோவில் கட்ட, அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு சான்று மட்டும்தான், இப்போது உள்ளது. புகைப்படமோ, வேறு தகவலோ என்னிடம் இல்லை. தற்போது, எனது தாத்தா மற்றும் தந்தை இருவரும் உயிருடன் இல்லாததால், வேறு தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.