திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மற்றும் பெண்ணாடத்தில் நேற்று மெய்கண்டாருக்கு குருபூஜை விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுாரில் சிவஞானபோதத்தை உலகுக்கு அருளிய மெய்கண்டாரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை விழா நடக்கும். அதன்படி நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை 9:30 மணிக்கு மகா தீபாராதனை, 10:00 மணிக்கு திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி நடந்தது. காலை 10:30 மணிக்கு ‘உணர்த்த உணர்தலின்’ என்ற தலைப்பில் சைவசித்தாந்த பயிற்சி மைய இயக்குனர் சோமசுந்தரம், பேராசிரியர் முத்தப்பன் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினர். பேராசிரியர் ரவீந்திரன் மகிழ்வுரை நிகழ்த்தினார். அருளாளர் சுந்தரர் அருட்சபை சார்பில் மெய்கண்டார் கோவிலின் தலவரலாறு பக்தர்களுக்கு இலவசமாக வழ ங்கப்பட்டது. மதியம் 12:30 மணிக்கு குருமரபு வாழ்த்தும், 1:15 மணிக்கு மகேசுவர பூஜையும், மாலை 6:00 மணிக்கு மெய்கண்டார் மூலவர் வழிபாடு, இரவு 7:00 மணிக்கு திருவீதியுலாவும் நடந்தது.