தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினம் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து உற்சவர் சிலை அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. கடந்த 27ம் தேதி முத்தாம்பிகை அம்மன் சன்னதியில் பச்சை போடும் நிகழ்ச்சி, 28ம் தேதி கோவில் எதிரில் நவ வீரர்கள் கம்பம் ஏறும் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்தது. பக்தர்கள் முருகன், சூரன் வேடமணிந்து சுவாமி திருவீதியுலாவில் பக்தி பாடலை பாடினர். முருகப்பெருமான் தனது சக்தி வேல் கொண்டு பத்மாசூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. நேற்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நாகராஜ் குருக்கள் பூஜைகளை செய்தார். விழா ஏற்பாடுகளை செங்குந்த முதலியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.