பதிவு செய்த நாள்
31
அக்
2014
01:10
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் மாலை 5.00 மணிக்கு, வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிலிருந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கி கொண்டுவரப்பட்டது.மாலை 6.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, அம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன், வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்திசிலை, சுப்பிரமணியசுவாமி கோவிலின் முன்புறம் ஆகிய மூன்று இடங்களில், சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 11.00 மணிக்கு கோவில்வளாகத்தில் ஸ்ரீநவசக்திநாராயணிபீடம் அருள்புரம், ஸ்ரீலஸ்ரீ அனந்தலிங்கதிவான் சுவாமிகள் தலைமையில், சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி சுதெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ’அரோகரா’ என்ற பக்திபரவசத்துடன் சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து பக்தகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்றுமுன்தினம் பகல் 12.00 மணிக்கு வேலாயுதசாமி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பின், மாலை 6.30 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வேலாயுதசாமி எழுந்தருள, கரிய காளியம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன் பொன்மலையை வேலயுதசாமி சுற்றி வரும்போது, வேலை சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.அதில், பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவராத்தில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு வழியாக வந்து, சிவலோகநாதர் கோவில் அருகே மலையின் அக்னி மூலையில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின் மலையின் கன்னி மூலையான தேரோடும் வீதியில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், கிருஷ்ணசாமிபுரம் வீதியில் மலையின் வாயு மூலையில் மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மன் மலையின் நிருதி மூலையான கோவை ரோட்டில் வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. உடன் பக்தர்கள் அரோகரா என்று கூறியபடியும், சஷ்டி பாராயணம் செய்தவாறு பின் தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், விரதமிருந்த பக்தர்களுக்கு, வாழை தண்டு, திராட்சை, மிளகாய், கேரட், வெள்ளரிக்காய், மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறி மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவம் : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், வேலாயுதசாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருகால்யாண உற்சவம் நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. இதில், மூலவர் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பின், மலை கோவிலில் இருந்து சிவலோகநாதர் கோவில் எதிரே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில், மாப்பிள்ளை அழைப்பு சென்று, மலை கோவில் வந்தனர்.
பின், வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகள் வைத்து, கலச பூஜையும், அதனை தொடர்ந்து கணபதி பூஜையும் நடந்தது. பின், சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்த பின், திருகல்யாண உற்சவம் நடந்தது. பின், சஷ்டி குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பிற்பகல் 12.00 மணிக்கு மூலவர் வேலாயுதசாமிக்கு மகா அபிஷேகத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் சந்திரமோகன், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினர், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.