சபரிமலை: சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் சரங்குத்தியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அரவணையில் தண்ணீரின் அளவு அதிகரிப்பு: அரவணையில் தண்ணீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து அதற்கு பயன்படுத்தப்படும் சர்க்கரை தரபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சபரிமலையின் முக்கிய வழிபாட்டுப் பிரசாதம் அரவணை. பச்சரிசி, சர்க்கரை, கற்கண்டு, ஏலக்காய், சுக்கு, நெய் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பக்தர்கள் இதை நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்துவர் என்பதால் தரத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அரவணை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதுடன், அரவணை தயாரிப்புக்கு பின்னும் அதன் தரம் பரிசோதிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட அரவணையை பரிசோதித்த போது அதில் தண்ணீரின் அளவு 10 சதவீதத்திற்கு பதில், 19 சதவீதமாக இருந்தது. இதற்காக அரவணை தயாரிப்பு தனி அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த சீசன் தொடக்கத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 5.89 லட்சம் கிலோ சர்க்கரை திருப்பி அனுப்பப்பட்டது. கடந்த டிசம்பரில் வாங்கப்பட்ட இந்த சர்க்கரை கெடும் சூழ்நிலை உருவானதால், அவற்றை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தற்போது இந்த சர்க்கரையை புதிய பேக்கிங்கில் அடைத்து மீண்டும் சபரிமலைக்கு அனுப்பியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்க்கரையின் தரம் குறைந்ததே அரவணையில் தண்ணீரின் அளவு அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் தற்போது வந்துள்ள சர்க்கரை பத்தனந்திட்டை, கோந்நி, திருவனந்தபுரம் ஆய்வகங்களுக்கு தரசோதனைக்காக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.