சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து டிச.27ல் மண்டல பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2014 12:12
சபரிமலை: டிச., 27ம் தேதி பகல் 12.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. கார்த்திகை முதல் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த மாதம் 17ம் தொடங்கி, 30 நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மண்டல பூஜை ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. மகரவிளக்கு நாளில் பந்தளம் மன்னர் கொண்டுவரும் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. மண்டலபூஜையின் போது அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் தங்க அங்கி ஒன்றை காணிக்கையாக வழங்கினார். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி வரும் 23ம் தேதி பவனியாக எடுத்து வரப்படும். 26ம் தேதி மதியம் பம்பைக்கு வந்து சேரும். அதன் பின் தலைச்சுமையாக, மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். 27ம் தேதி பகல் 12.30 மணிக்கு மண்டலபூஜை நடைபெறும் என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். பூஜை நடத்துவதற்கு வசதியாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 11 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெறும். தொடர்ந்து கோயில் முன்புறம் மண்டபத்தில் களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நாளில் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது. மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30 மாலை 5.30க்கு நடை திறக்கும். 31 அதிகாலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.