பதிவு செய்த நாள்
22
டிச
2014
12:12
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பால ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. முத்துராமலிங்க சுவாமி கோயில் ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி நடந்தது. ராமஜெயம் பாடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். துளசி, செந்தூர அலங்காரங்களில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
மண்டபம்: ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்திவடிவேல் முருகன் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி நடந்தது. இதில் பக்தர்கள் துளசி, வடை மாலை சாத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
பரமக்குடி: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மூலவருக்கு 11 வகையான அபிஷேகங்களுடன், தீபாராதனை நடந்தது. நேற்று, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை அனுக்கை, கலச ஸ்தாபனம், ஹோமங்களுடன் பூர்ணாகுதி நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவருக்கு 13 வகையான பழங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவருக்கு வடைமாலை சாற்றப்பட்டு, 1008 நாமாவளி அர்ச்சனைகள் நடந்தது.
* கோதண்டராமசாமி கோயிலில், அனுமனுக்கு பக்தர்கள் வடமாலை சாற்றி வழிபட்டனர். மாலையில் உற்சவ மூர்த்தி வீதிவலம் நடந்தது. 108 திருவிளக்கு வழிபாடு, மின்னொளி தீப தேரோட்டம் நடந்தது.
* காக்காதோப்பு சோலை ஆஞ்சநேயர் மற்றும் நாகர்மேட்டில் உள்ள பாலஅனுமானுக்கும் விஷேச அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், அனுமன் வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. எமனேஸ்வரம் அனுமார் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
சாயல்குடி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனுமன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.இக்கோயிலில் அனுமனுக்கு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் வடை மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். இதேபோல், மாரியூர் சமேத பவளநிற வள்ளியம்மன், பூவந்திய நாதர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. ஏனாதியில் உள்ள அனுமன் கோயிலில் பெண்கள் 108 குத்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
கீழக்கரை: சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் அனுமன் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். பூஜை களை ரெகுநாதபட்டர் செய்திருந்தார். மார்கழி அமாவாசையையொட்டி ஏராளமானோர் புனித நீராடினர்.