பதிவு செய்த நாள்
22
டிச
2014
03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தபோவனம் ஞானானந்தா நிகேதனில் நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேள்வியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நேற்று நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத் தில் சிவபெருமான், அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு, வேள்வி துவங்கியது. நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர்கள் நித்யானந்தகிரி சுவாமிகள், சமாநந்த சுவாமிகள், சதாசிவகிரி சுவாமிகள் தலைமை தாங்கி கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் ஆகியோருக்கு சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்து, திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர். திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாசகம் முற்றோதல் குழு, உறையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வாரவழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், ஆற்காடு சைவத்திருமுறை மைய மாணவர்கள் மன்றத்தை சேர்ந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை இடைவிடாது வேள்வியை நடத்தினர். திருநீற்று பை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஞானானந்தா நிகேதன் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஞானானந்தா அறக்கட்டளை அறங்காவலர்கள் பரமேஸ்வரன், சுவாமிநாதன், வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.