பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
அவலூர்பேட்டை: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முழுமையாக நடக்க அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் பெருவளூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தை சேர்ந்த கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது.
சதுர வடிவ கருவறையில் ஆவுடையார் மீது கோட்டீஸ்வரர் அமைந்துள்ளார் என்பது இதன் தனி சிறப்பு. கருவறையை சுற்றிலும் கிழக்கு திசை நீங்கலாக மற்ற திசைகளில் தேவ கோட்டங்கள் உள்ளன. துர்க்கை அம்மன் சிலையும் உள்ளது. முருகன், விநாயகர் மற்றும் கோகிலாம்பாள் ஆகியோருக்கு தனி சன்னதிகள் காணப்படுகின்றன. மகிழ மரம் கோவிலின் ஸ்தல விருட்சகமாகவும், செப்பினாலான கொடி மரம் உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தீபரட்சகர் எனும் சித்தர் இந்த கோவிலில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கி ஆன்மிக சேவையாற்றினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் அருளினால் கோகில ஜோதியை அங்கு தரிசித்தார்.அவர் அங்கு ஒரு கோடி தீபத்தை ஏற்றி வழிபட்டார். இதனால் சிறந்த பலன் தரும் தீபஸ்தலமாக, இக்கோவில் விளங்கியது. இந்த பகுதியில் உள்ள கோவிலினால், பெரிய தீபங்கள் ஜொலிக்கும் ஊர் என்பதே பெருவளூர் என்று பெயர் வர காரணம் ஆனது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு மாசி மாத திருவிழாவின் போது தேருக்கான சீலைகள் இந்த கோவிலிலிருந்து தான் வழங்கி வந்தனர்.
இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த கோவில் சிதிலமடைந்து, பாழடைந்து காணப்பட்டது. இதனால் கிராம மக்கள் சார்பில் கும்பாபிஷேகம் செய்ய கடந்த 2007ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருப்பணிகளை செய்வதற்கு அப்போது சம்மதித்து, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது. தற்போது இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிவன் மற்றும் அம்மன் சன்னதிகள் சீரமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. மேலும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோவிலுக்கு சுற்று சுவர் அமைக்கும் பணியும் நடந்துள்ளது. கோவிலின் உட்புறம் தரைப்பகுதியும், ராஜ கோபுரங்கள் அமைத்தல், கொடி மரம் சீரமைத்தல், கல்பாலிஷ், திருத்தேர் அமைத்தல், வீதி உலாவிற்கான வாகனங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு இது வரையில் நிதி வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. கோவில் சிதிலமடைந்த நிலையினால் பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பிரம்மோற்சவம், 7 நாள் நடக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, பிரதோஷம், வேதபாராயணம், பஜனை உள்ளிட்ட உற்சவங்களை நடத்த இயலாமல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
எட்டு ஆண்டுகளாகியும் இதுவரையிலும் திருப்பணிகள் முழுமையாக செய்ய இயலாமல் போதிய நிதி ஆதாரமில்லாத வகையில் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஏப்ரல் 25 ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நிதி பற்றாக்குறையை போக்கும் விதமாக பக்தர்கள் மற்றும் அரசு மூலம் கோவில் திருப்பணிகள் முழுமையாக நடக்க திருப்பணிக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை காப்பாற்றும் விதமாக திருப்பணி முழுமையாக நடக்க அறநிலைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.