பதிவு செய்த நாள்
02
பிப்
2015
12:02
திருப்போரூர்: ஒரகடம் கோதண்டராமர் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
ராமனின் அழகை காண ஆவல் கொண்டு, கலியுகத்தில் மகரிஷிகள் கடும் தவம் மேற்கொண்டனர். சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்ட ராமராக ஒரகடத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததாக ஐதீகம். அங்கு, 1,250 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் பரமேஸ்வர வர்மன் என்ற பல்லவ மன்னனால் கலை நுணுக்கத்துடன் கோவில் கட்டப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யாமல், பராமரிப்பின்றி கோவில் இருந்து வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகமான அகோபல மடம், கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர். 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் விமானங்கள், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஸ்ரீமத் அகோபல மட, 46வது பட்டம் ஸ்ரீமத் வண்சடகோப ரங்கநாத எதாந்திர மகாதேசிகர் முன்னிலையில், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து ராமர், சீதை சன்னிதியில் விசேஷ திருமஞ்சனம், மலர் அலங்கார வைபவமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.