பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
அன்னூர் : வடுகபாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மைசூர் ஸ்ரீ மகாமுனி சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையத்தில், பழமையான சவுடேஸ்வேரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், சவுடேஸ்வரி, மாரியம்மன், மாகாளியம்மன் சன்னதிகள் உள்ளன.மைசூர், சாமுண்டேஸ்வரி கோவிலில், காவல் தெய்வமாக உள்ள ஸ்ரீமகா முனி அய்யன் சிலைகளை, கோவை மாவட்டத்தில், முதன் முறையாக, இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய திருப்பணிக்குழுவினர் முடிவு செய்தனர்.இதன்படி, கடந்த 6ம் தேதி கொலு பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 7ம் தேதி புனித தீர்த்தம் கொண்டு வருதல், யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 9.00 மணிக்கு, மைசூர் மகா முனி அய்யன் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சேலம், பாண்டுரங்க சாஸ்திரிகள் தலைமையில் சர்வசாதகம் செய்யப்பட்டது.அன்னூர், கோவை, திருப்பூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.