பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகள், கடந்த 2 ஆண்டுகளாக மூடி கிடப்பதால் பக்தர்கள் பாதிக்கப் படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கு அதிகமான பக்தர்கள் ரயில், பஸ்களில் வருகின்றனர். இங்குள்ள தனியார் லாட்ஜில் தங்க பண வசதியின்றி, கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் ஓய்வெடுத்து விட்டு, சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுத்தமான குடிநீர் இன்றி, தூசிகளுடன் தெருவில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள், சில சமயம் உடமைகள், பணத்தை திருடர்களிடம் பறி கொடுத்து விட்டு தவிக்கின்றனர். இதை தவிர்க்க, 2013 ல் கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஆண், பெண் பக்தர்களுக்கு 2 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன. கட்டுமான பணிகள் முடிந்து, 2 ஆண்டுகள் ஆகியும் விடுதிகள் மூடியே கிடப்பதால் பக்தர்கள், தங்களது உடமைகளை கையில் தூக்கி கொண்டு நகர் முழுவதும் அலையும் அவலம் உள்ளது.
கோயில் ஊழியர்களின் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விடுதி கட்டடத்தின் இரும்பு கதவு கள் துருப்பிடித்து பலவீனமாகி வருகிறது. மேலும் விடுதியை சுற்றி வளர்ந்துள்ள முள் செடி, பாம்புகள், விஷ வண்டுகளுக்கு புகலிடமாக மாற்றி உள்ளது.இந்த விடுதிகளை ஓராண்டுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெ., திறந்து வைப்பதாக இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையான பிறகு, விடுதியை திறந்து வைக்க உள்ளதாக கோயில் ஊழியர்கள் கூறுகின்றனர். இளைபாறி செல்ல வழியின்றி தவிக்கும் ஏழை பக்தர்கள் நலன் கருதி, 2 விடுதிகளையும் பயன் பாட்டிற்கு கொண்டு வர, இந்து அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயில் அதிகாரி கூறுகையில்,"" தங்கும் விடுதிகளின் கட்டுமான பணி 100 சதவீதம் முடிந்தது. இந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி விரைவில் திறக்கப்படும், என்றார்.