பதிவு செய்த நாள்
04
மார்
2015
11:03
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. இன்று மதியம், மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதப் பெருமாள் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு திருமஞ்சனம் சாட்டப்பட்டது. பின் உற்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், 4:00 மணிக்கு அலங்கார கோலத்தில், மண்டபத்திற்கு எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. பெருமாளுக்கு பூணூல் அணிவித்து, கங்கணம் கட்டப்பட்டது. அர்ச்சகர்கள் சுவாமிகளின் குலம் வாசித்தனர். மஞ்சள் இடிக்கும் சடங்கு முடிந்தபின், மாங்கல்ய பூஜை செய்து, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மாலையை ஏந்தி, ஆடிப்பாடி வந்தனர். அதன்பின் சுவாமிக்கு மாலை மாற்றும் சடங்கு நடந்தது.
திருமணக்கோலத்தில் இருந்த சுவாமியின் முன், ஆண்டாள் நாச்சியார் அருளிய வாரணமாயிரம் வாசிக்கப்பட்டது. நெல் பொரியிடுதல் நிகழ்ச்சிக்கு பிறகு, பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.திருக்கல்யாண உற்சவத்தை கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, சுதர்சன் பட்டர், ஸ்ரீதர்பட்டர், சுரேஷ் நாராயணன், கிருஷ்ணன், திருவேங்கடம் உட்பட, 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். திருமணக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று தேரோட்டம் : இன்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மதியம், 3.15 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.